அணு உலையை சுற்றி தாது மணல் அள்ள வைகுண்டராஜனுக்கு அனுமதி: கூடங்குளம் போராட்டக்குழு பகீர்
சென்னை: கூடங்குளம் அணுஉலையை சுற்றி தாது மணல் அள்ள வைகுண்டராஜனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகி முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். கூடங்குளம் அணுமின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யபப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை கைவிடக் கோரி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு நிர்வாகிகளில் ஒருவரான முகிலன் இன்று திருச்சி நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முகிலன், அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிப்படி கூடங்குளம் அணு உலையை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த சுரங்கமும் தொழிற்சாலையும் அமைக்கக் கூடாது. இந்த விதியை மீறி வைகுண்டராஜனுக்கு 756 ஏக்கர் பரப்பளவில் தாது மணலை அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளம் அணுஉலையை தொடங்க தடையாக உள்ள போராட்டத்தை ஒடுக்குகிறேன். அதற்கு பதிலாக வைகுண்டராஜனுக்கு தாது மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடம் முதல்வர் ஜெயலலிதா ரகசியமாக பேசியிருப்பார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய நான் உள்பட 1 லட்சம் மக்கள் மீது தேசதுரோகம், அரசுக்கு எதிரான யுத்தம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்டுள்ள 248 வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்று தமிழக அரசு அறிவித்தது. மீதமுள்ள 132 வழக்குகள் குறித்து உள்ளூர் நீதிமன்றங்கள் முடிவு எடுக்கும் என்று கடந்த 2014ம் ஆண்டு மே 8ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அணு உலைக்கழிவு
கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட அணுக்கழிவுகளை கர்நாடகத்தில் வைப்பதாக கூறிய உடன் கர்நாடகத்தில் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து, அந்த முடிவு கைவிடப்பட்டு கூடங்குளத்திலேயே அணுக்கழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அணுக்கழிவுகளை 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாக்க வேண்டும். திடக்கழிவையே மேலாண்மை செய்ய தமிழக அரசால் முடியவில்லை. இவ்வாறு இருப்பின், எப்படி அணுக்கழிவுகளை பாதுகாக்க முடியும்.
தேச துரோக வழக்குகள்
132 வழக்குகளும்.... தேச துரோகம் (இதச பிரிவு-124-ஏ), அரசுக்கு எதிரான யுத்தம்((இதச பிரிவு-121), வெடிகுண்டு வீசிய வழக்கு, பொது சொத்துகளுக்கு சேதாரம், கொலைமுயற்சி, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, என்ற மிக மிக கடுமையான பிரிவுகளில் உள்ளது. இதை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போராட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட ஒரு வழக்கிற்கு கூட இதுவரை குற்றப்பத்திரிக்கை கொடுத்து, தமிழக அரசு வழக்கை நடத்தவில்லை.
அப்பாவிகளை அலையவைப்பதா?
போராட்டத்தை முன் நின்று நடத்திய எங்களைப் போன்ற போராட்ட தலைவர்கள் யாருக்கும் சம்மன் கொடுக்காமல், மக்களுக்கு மட்டும் ஒருவருக்கு 10 வழக்கு வரை சம்மன் என 2000 பேருக்கு சம்மன் தயாரித்து, அதில் 400 பேருக்கு மட்டும் சம்மன் கொடுத்து, மக்களை நீதிமன்றத்தில் வாய்தா, வாய்தா என தமிழக அரசு மக்களை கடந்த 5 மாதமாக அலைய வைத்து வருகிறது.
திருச்சி நீதிமன்றத்தில் சரண்
கூடன்குளத்தில் அணு உலையை சுற்றியுள்ள பகுதியில், குறிப்பாக இடிந்தகரை- கூடன்குளம் - பஞ்சல் - கூத்தன்குழி - பெருமணல் - கூட்டப்புளி கடற்கரைப் பகுதியில், தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதாவின் பங்குதாரர் என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வைகுண்டராசன் அவர்களின் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு, தாதுமணல் அள்ள 30 ஆண்டுகளுக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் (AERB) சட்டத்திற்கு விரோதமாக, சுமார் 300 ஹெக்டேர் (சுமார் 756 ஏக்கர்) நிலத்தை 12-08-2011 அன்று வழங்கிய தமிழக அரசின் அனுமதியை உடனே ரத்து செய்யக் கோரியும், எங்கள் மீது தமிழக அரசால் போடப்பட்டு, இதுவரை கைது செய்யாமல் உள்ள பொய் வழக்குகளுக்காக (ஏற்கனவே 6 தேசதுரோக வழக்கில் நான் 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டேன்) திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை (23-12-2015) நான் சரணடைய இருக்கிறேன் என்றும் முகிலன் கூறியுள்ளார்.