போராட்டத்தை தூண்டியதாக வழக்கு: உதயகுமாருக்கு வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன்
நெல்லை: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாருக்கு ஜாமீன் வழங்கி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்ட சுப.உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. அப்போது, உதயகுமார் இடிந்தகரையில் இருந்ததையடுத்து, அவரது தந்தை இந்த சம்மனை பெற்றுக்கொண்டார்.
ஆனால், உதயகுமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதிகள், வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இன்று (15ஆம் தேதி) வள்ளியூர் நீதிமன்றத்தில் உதயகுமார் ஆஜரானார். இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.