பிளாஸ்டிக்கை ஒழிப்போம்.. காரைக்குடியில் விழிப்புணர்வு பேரணி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களின் புதல்வி திருமதி.டாக்டர் உமையாள் இராமநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (05.10.18) காரைக்குடி ரோட்டரி கிளப் ஆப் பேர்ல் சங்கமத்தால் நடத்தப்பட்டது.
இப் பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜே. ஜெயகாந்தன் தலைமையேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் மற்றும் அழகப்பா பள்ளிக் குழுமத் தலைவர் டாக்டர்.ஆர். இராமநாதன் வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆ.பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார். இப்பேரணி காரைக்குடி ஆரியபவன் ஹோட்டல் அருகில் இருந்து துவக்கி வைக்கப்பட்டது.
பேரணியில் இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எஸ். எம் .எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,எஸ்.எம்.எஸ்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, மற்றும் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளிகார்த்திகேயன் பள்ளி , உமையாள் இராமநாதன் கல்லூரி, நேஷனல் கேட்டரிங் கல்லூரி ,ராஜராஜன் பொறியியல் கல்லூரி,கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா கல்லூரி குழுமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு , பிளாஸ்டிக் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பிளாஸ்டிக்கால் விளையும் தீமைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பியும், துண்டுபிரதிகளை பொது மக்களுக்கு விநியோகித்தும் பிரச்சாரம் செய்தனர்.
பேரணியானது காரைக்குடி ஆரியபவனிலிருந்து செக்காலை, பெரியார் பேருந்து நிறுத்தம் வழியாக வழிநடத்தப்பட்டு புதியபேருந்து நிலையம் சென்று இறுதியாக ஆர்யபவன் பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் சாமி சத்தியமூர்த்தி, காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜி. கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் திருமதி. சுந்தராம்பாள் அவர்கள் மற்றும் ரோட்டரி துணை ஆளுநர் ரோட்டேரியன் முத்துக்குமார் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பட்டயத்தலைவர் நாச்சியப்பன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைச் செயலாளர் ரோட்டேரியன் முகமது சமீம் அலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பேர்ல் சங்கமம் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.