கிண்டி தொழில்பேட்டையில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு! ஐடி ஊழியர்கள் அச்சம்
சென்னை: கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால், தொழில்பேட்டை பகுதியில் பணியாற்றும் பெண்கள் அச்சத்துடனே நடமாட வேண்டியுள்ளது.
கிண்டி தொழிற்பேட்டை, அதையொட்டியுள்ள ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் பல சிறிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் ஷிஃப்ட் அடிப்படையில் இயங்கி வருவதால் 24 மணி நேரமும் பணியாட்கள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம்.
ஆட்டோக்களில் அதிக ரேட்
ஆனால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கூறுகிறார்கள் அங்கு பணிபுரிவோர். கிண்டி ரயில் நிலையத்திலிருந்து தொழிற்பேட்டைக்குச் செல்ல இரவு 8 மணிக்கு மேல் சரியான அளவில் பஸ் வசதி இல்லை.
இதனால் ஆட்டோக்களே தீர்வு, இரவு 9 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோக்களில் அருகில் உள்ள அம்பாள் நகர் செல்வதற்கே கூடுதலாக 20 ரூபாய் கேட்கிறார்களாம் ஆட்டோவாலாக்கள்.
திருட்டு பயம்
இரவு 9 மணிக்கு மேல் கிண்டியில் இறங்கி ஈக்காட்டுதாங்கல், ஒலிம்பியா, அம்பாள் நகர் உள்ளிட்ட இடங்களுக்குப் பணிக்குச் செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. திருடர்கள் இந்த இடத்தில் வழிப்பறியில் ஈடுபடுவதாக பெண்கள் சொல்கிறார்கள்.
பாலியல் சீண்டல்
கிண்டி அருகே கால் சென்டர் ஒன்றில் இரவு நேரப் பணியில் இருக்கும் ஒரு பெண் இதுகுறித்து கூறுகையில், கிண்டி காவல் நிலையம் அருகே நானும் என் தோழியும் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது பைக்கில் வந்த இரு வாலிபர்கள் போனை பிடுங்கியதோடு, பாலியல் சீண்டலும் செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், அந்த பகுதி இப்போதும் பாதுகாப்பற்றதாகவே உள்ளது. போலீசார் ரோந்து செல்வதை பார்க்க முடிவதில்லை என்றார்.
டாஸ்மாக் தொல்லை
அதோடு, கிண்டி ரயில் நிலையம் அருகேயுள்ள மதுபானக் கடையினால் இந்த வழியைக் கடக்கும் பெண்கள் அச்சத்துடனே செல்லவேண்டியுள்ளது. குடிகாரர்கள் சிலர் போதையில் ஆடையின்றி அலங்கோலமாக கிடக்கின்றனர். சுரங்கப் பாதையில் செல்லும் பெண்களை இந்தக் குடிகாரர்கள் சீண்டுகிறார்கள். குடிபோதையில் இருக்கும் காரணத்தை சொல்லி, தர்ம அடியில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைக்கின்றனர்.
பெண்களும் உடந்தை
சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கூறுகையில், "ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் பேருந்து நிறுத்தத்தில் இரவு 10 மணிக்கு நான் நின்று கொண்டிருந்தபோது ஒரு பெண் என் அருகில் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நான் மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தபோது அப்பெண்ணும் என்னை பின்தொடர்ந்தார். நான் ஓடிக்கொண்டே செல்போனில் எனது நண்பருக்கு தகவல் கொடுத்து வரவைத்தேன். நண்பர் வந்ததும், அந்த பெண் ஓடிவிட்டார். இப்படி பெண்களும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக அங்கு சுற்றுகிறார்கள் என்றார்.
போலீசார் கவனிப்பார்களா..
இதனிடையே கிண்டி தொழில்பேட்டையில் 100 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இனிமேலாவது, சென்னையின் முக்கிய அங்கமான கிண்டியில் பெண்கள் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்வார்களா என்பதே பெண் ஊழியர்களின் ஏக்கமாக உள்ளது.