தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கும்பல் ஊடுருவி உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கும்பல் ஊடுருவி உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாகர்கோவில் : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். உரிய நீதி விசாரணை அதில் நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், சிலர் திட்டமிட்டு அவர் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.
பேராசிரியை நிர்மலாதேவியின் பேச்சில் இருந்தே அவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் தவறான முறையில் பேசி வருவது தெரிகிறது. ஆனால், அதற்கு ஆளுநரை குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
தமிழகத்தில் அரசியல் கட்சியினரை தவறாக சித்தரிக்கும் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இணையதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதே காரணம்.
காவிரி பிரச்னை இன்று நேற்றைய பிரச்னை இல்லை. கடந்த 150 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதில் 100 நாட்களுக்குள் தீர்வு வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.