இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா.. ஸ்டெர்லைட் மீது பாயும் பாத்திமா பாபு!
Recommended Video
தூத்துக்குடி: ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்த, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
பேராசிரியை பாத்திமா பாபு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் பேராசிரியை பாத்திமா பாபு, ஸ்டெலைட் போராட்டத்தில் பங்கேற்ற ஆண் நண்பர் தெர்மல் ராஜா என்பவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காட்சி ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாத்திமாவும், தெர்மல் ராஜாவும் ஒன்றாக இருந்த போது ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை பாத்திமா பாபு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை சந்தித்து நேற்று இரவு புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முடக்குவதே அந்நிறுவனத்தின் குறிக்கோள். அது ஒரு போதும் நிறைவேறாது. அதற்காக பல உத்திகளை கையாண்டு உள்ளது. அதில் இன்று உச்சகட்டமாக மிகவும் கேவலமான ஒரு உத்தியை கையாண்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம். அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். மனுவில் யாரையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் அளிக்கவில்லை.
பரவிவரும் வீடியோவினால் எங்கள் போராட்டத்தில் ஒரு காலமும் பின்னடைவு ஏற்படாது. இது தொடர்பாக விளக்க அறிக்கையை நாங்கள் விரைவில் வெளியிடுவோம். புகார் மீதான சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.