மது விலக்கு கோரி 48வது நாளாக நடை பயணம்: நெல்லை அருகே மயங்கி விழுந்த குமரி அனந்தன்
நெல்லை: இலக்கிய செல்வர் என்று அழைக்கப்படுபவரும், மூத்த அரசியல்வாதியுமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, குமரி அனந்தன், மது விலக்கிற்கு ஆதரவாக நெடுங்காலமாக போராடி வருகிறார்.
வயது முதிர்ந்த நிலையிலும், மது விலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் இருந்து அவர் நடைபயணம் துவங்கி மாநிலமெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி சென்னையில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றார்.
நடை பயணத்தின் 48 வது நாளாக இன்று அவர் நெல்லை மாவட்டம் பொன்னாகுடி அருகே வரும்போது, தளர்ச்சி காரணமாக திடீரென அவர் மயங்கி விழுந்தார், மூச்சுதிணறல் ஏற்பட்டதன் காரணமாக குமரி அனந்தன் நெல்லை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவரும், குமரி அனந்தனின் மகளுமான, தமிழிசை சவுந்தரராஜன் தந்தையை பார்க்க மருத்துவமனை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழிசை சவுந்தரராஜன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.