நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு: கைது செய்யப்பட்ட சீமான், பாரதிராஜா உள்ளிட்டோரை பார்க்க அனுமதிக்காத போலீஸை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னையில் நடந்த ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 பேர் கொலை வழக்கு
இதில் பாரதிராஜா, சீமான், அமீிர், கௌதமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அண்ணா சாலை புரட்சியின்போது போலீஸ்காரரை தாக்கியதக நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விடுவிக்கப்படவில்லை
மோடி சென்றவுடன் சீமானை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மோடி டெல்லி செல்ல விமானம் ஏறிய பிறகும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்படாத செய்தி பரவியது. இதையடுத்து பல்லாவரம் திருமண மண்டபத்துக்கு மன்சூர் அலிகான் சென்றார். சீமான் உள்ளிட்டோரை பார்க்க போலீஸார் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தன்னையும் கைது செய்யுமாறு அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
விடுவிப்பு இல்லை
இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். எனினும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டு மன்சூர் அலிகான் மட்டும் விடுவிக்கப்படவில்லை.
கமிஷனர் அலுவலகத்தில்...
இதையடுத்து கடந்த சனிக்கிழமை சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சிம்பு அங்கு கமிஷனரை சந்தித்து மன்சூர் அலிகானை கைது செய்தது ஏன் என்று கேட்டார். மேலும் உடல்நிலை சரியில்லாத அவரை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
நிபந்தனை ஜாமீன்
மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதாவது மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் நிபந்தனை.