சிலை பதுக்கிய தீனதயாளன் எங்கே.. அடிக்கடி வந்த நடிகை யார்?... பரபரப்பாகும் சிலை திருட்டு வழக்கு!
சென்னை: பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருடன் சாமி சிலைகளை கடத்தி பதுக்கிய , தீனதயாளனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போலீசில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடத்திய சிலைகளை சுபாஷ்கபூர் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவான தீனதயாளனை பிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை, மூர்ஸ்கேட் சாலையில் உள்ள பங்களா வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில், 15 போலீசார் அடங்கிய சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படையினர் நேற்று காலை 8 மணி அளவில் குறிப்பிட்ட பங்களா வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.
அந்த வீட்டிற்குள் நடத்திய சோதனையில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏராளமான கற்சிலைகள் இருந்தன. முருகன், விநாயகர், சிவன், அம்மன் போன்ற சாமிகளின் சிலைகள் மற்றும் யானை போன்ற விலங்குகளின் சிலைகள் ஏராளமாக இருந்தன. இந்த சிலைத் திருட்டுக் கும்பலுக்கு தலைவனாக ஆந்திரத்தைச் சேர்ந்த தீனதயாளன் (78) செயல்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கெனவே சிலைத் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. மேலும், தீனதயாளனுக்கும், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலைகள் திருடி விற்பனை
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தேனாம்பேட்டை அண்ணா சாலையில் பழைமையான பொருள்கள் விற்கும் மையத்தை தீனதயாளன் தனது மனைவி அபர்ணா பெயரில் நடத்தி வந்துள்ளார். பின்னர் அவருக்கு சுபாஷ் கபூருடன் ஏற்பட்ட தொடர்பைப் பயன்படுத்தி, கோயில் சிலைகளை திருடி விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.
ஆந்திராவில் தீனதயாளன்
நாளடைவில், அவரே சிலைகளைத் திருடி, நேரடியாக வெளிநாட்டில் விற்று வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு ஜெர்மனியில் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்ட பின்னர், சிலைகளை திருடி விற்பதில் தீனதயாளனுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மேலும் சிலைக் கடத்தல் தடுப்புபப் பிரிவு போலீசாரின் கெடுபிடிகளும் அதிகமானதால், தீனதயாளன் தனது முகாமை ஆந்திரத்துக்கு மாற்றினார்.
சென்னையில் மீண்டும் விற்பனை
இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் முரேஸ் கேட் சாலையில் உள்ள பங்களாவுக்கு தீனதயாளன் மீண்டும் குடி புகுந்தார். அதன் பின்னர், அவர் வழக்கம்போல் சிலைத் திருட்டு தொழிலில் விறுவிறுப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
ஆயிரம் ஆண்டு பழமையான சிலைகள்
தீனதயாளன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கற்களால் ஆன மொத்தம் 55 சிலைகளைப் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவையாகும். சிலைகளை தீனதயாளன்தான் பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தீனதயாளன் தலைமறைவு
போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட தீனதயாளன் பெங்களூருவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. தீனதயாளன் வீடடில் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை சிலைகளும், கோவில்களில் திருடப்பட்டு, கடத்தி பதுக்கி வைக்கப்பட்டவை ஆகும்.
தொல்பொருள் ஆய்வுத்துறை
கைப்பற்றிய சிலைகள் அனைத்தையும் போலீசார் மூட்டைகட்டி அள்ளிச்சென்றனர். முன்னதாக தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் வந்து சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
3 பேர் கைது
தீனதயாளன் வீட்டில் இருந்த ஊழியர்கள் குமார்,58, மான்சிங் 58, ராஜாமணி, 60 ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிலைகள் நீதிமன்ற பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டன. கைதான 3 பேரும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புழல் சிறையில் அடைப்பு
மூவரையும் ஜூன் 14ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், அவர்கள் 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பேரில், அவர்கள்3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ.50 கோடி வரை
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் 1000ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை விலை மதிப்பிட முடியாது. வெளிநாடுகளுக்கு இந்த சிலைகளை கடத்திச்செல்ல தீனதயாளன் திட்டமிட்டு இருக்கலாம் என்று உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலைநயம்மிக்க சிலைகள்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த சிலைகள் ரூ.50 கோடி வரை விலைபோகும் என்று கருதப்படுகிறது. கற்சிலைகளாக இருந்தாலும், அத்தனையும் கலைநயத்தோடு உருவாக்கப்பட்டவை ஆகும். தீனதயாளனை பிடித்து விசாரணை நடத்தினால்தான், இந்த சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டவை என்பது தெரியவரும்.
50 ஆண்டுகளாக சிலை திருட்டு
தீனதயாளன் கடந்த 1965ம் ஆண்டிலிருந்து சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திவருவதாக தெரிய வந்துள்ளது. ஒருமுறை மட்டும் போலீசார் அவர் மீது வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கில் கூட அவர் முன்ஜாமீன் பெற்று விட்டார். சிறைக்குப் போகவில்லை.
சுபாஷ்கபூர் கூட்டாளி
பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், தீனதயாளனுக்கு நெருக்கமானவர். தீனதயாளன் கடத்திய சிலைகள் சுபாஷ்கபூர் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவற்றில் 2 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டன.
சிலைகடத்தலுக்கு மகன் உடந்தை
சிலைகள் பதுக்கியிருந்த பங்களா வீட்டின் மேல் தளத்தில்தான் தீனதயாளன் வசித்து வந்தார். அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகனும், சிலைக் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
தீவிர தேடுதல் வேட்டை
கடத்தல் சிலைகளை மும்பை கொண்டு சென்று அங்கிருந்து, கடல் மார்க்கமாக கப்பலில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரைவில் தீனதயாளனை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிலை கடத்தல் வழக்கில் இயக்குநர் சேகர்
கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் வி.சேகர், பழங்கால கோயில் சிலைகளை திருடிக் கடத்த முயற்சித்த வழக்கில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பழங்கால சிலைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.77 கோடியாகும்.
பதுக்கி வைக்கப்பட்ட சிலைகள்
இந்த நிலையில் தற்போது பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் சிலைகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவான தீனதயாளனின் செல்போன் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீனதயாளளின் வீட்டில் உள்ள ரகசிய அறைகளை உடைத்து சோதனை நடத்தினால் அதில் உள்ள அபூர்வ சிலைகளை கைப்பற்ற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
யார் அந்த நடிகை?
இதற்கிடையே சிலைகள் சிக்கிய வீட்டுக்கு அடிக்கடி ஒரு பிரபல நடிகை வந்து போயுள்ளாராம். அவர் சிலை வடிப்பதற்கு போஸ் கொடுப்பதற்கா வருவதாக அப்பகுதியில் சொல்லி வைத்துள்ளனர். ஆனால் அவருக்கும், சிலை கடத்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். இதையடுத்து அந்த நடிகையிடம் விரைவில் விசாரணை நடக்கவுள்ளதாம்.