படிந்தாரா முதல்வர் பழனிசாமி...அன்வர்ராஜா எம்.பி மூலம் தினகரனுக்கு இஃப்தார் நோன்பு திறக்க தூது
அதிமுக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு விழாவில் தினகரன் பங்கேற்க அன்வர்ராஜா எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக சார்பில் சென்னையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தினகரன் பங்கேற்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவரும் எம்.பியுமான அன்வர் ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் அரசியல் கட்சிகளும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இதன்படி அதிமுக சார்பபில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஃப்தார் நோன்பு
சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு அழைப்பு விடப்படவில்லை என்று தகவல் வெளியானது. இதனால் தினகரன் அதிமுக அம்மா அணி சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்பேற்பாரா மாட்டாரா என்று கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
அன்வர்ராஜா சந்திப்பு
இந்நிலையில் அதிமுக சிறுபான்மை பிரிவுத் தலைவர் ராமநாதபுரம் எம்.பியுமான அன்வர் ராஜா சென்னை அடையாறு வீட்டில் டிடிவி. தினகரனை சந்தித்துள்ளார். இது மரியாதை நிதித்தமான சந்திப்பு என்று அன்வர்ராஜா கூறினார். மேலும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது மாலையில் தெரியும் என்றும் சொல்லிச் சென்றார்.
படிந்தாரா முதல்வர்
இதோடு நின்றுவிடாமல் அன்வர்ராஜா அளித்த பேட்டியில் குறிப்பாக ஒரு விஷயத்தை உணர்த்தினார். அதாவது கட்சி தினகரனுக்கு, ஆட்சி எடப்பாடிக்கு என்ற உடன்படிக்கைக்கு முதல்வர் பழனிசாமி வந்துள்ளதாக தெரிகிறது. இதன் பிரதிபலிப்பாகவே அன்வர்ராஜா தனது பேட்டியில் தற்போது கட்சி வேறு, ஆட்சி வேறாக உள்ளது என்றார்.
அழைப்பு விடுத்தது உண்மைதான்
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். இந்நிலையில் தினகரன், அன்வர் ராஜா சந்திப்பு குறித்து எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் தொலைபேசி மூலம் ஒரு தகவலை அளித்துள்ளார். அதில் முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் அன்வர்ராஜா தினகரன் இல்லத்திற்கு சென்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுத்ததாக கூறினார்.
தினகரன் கையில் இறுதி முடிவு
ஆனால் அதில் பங்கேற்பதா வேண்டாமா என்ற இறுதி முடிவை தினகரன் தான் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனநிலையிலேயே தினகரன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.