எல்லாருக்கும் ஹெல்மெட்... அப்போ ஸ்கூல் போற குழந்தைகளுக்கு? குழப்பத்தில் பெற்றோர்!
சென்னை: அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பள்ளி செல்லும் தங்களது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் வாங்க வேண்டுமா என்ற கேள்வி எல்லாரது மனதிலும் எழுந்துள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அது மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் வண்டி ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகள்...
பெற்றோர்கள் பலர் தங்களது பிள்ளைகளைத் தாங்களே தங்களது இருசக்கர வாகனத்தில் பள்ளி அழைத்துச் செல்கின்றனர். அப்படியானால் அவ்வாறு அழைத்துச் செல்லும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிய வேண்டுமா என்ற குழப்பம் பெற்றோர் மத்தியில் உண்டாகியுள்ளது.
கட்டாயம்...
இது தொடர்பாக போக்குவரத்து அலுவலர்கள் கூறும்போது, ‘இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும்' என்கின்றனர்.
குழந்தைகளுக்கானது...
ஆனால், பெரும்பாலான ஹெல்மெட் விற்பனை கடைகளில், குழந்தைகளுக்கான ஹெல்மெட் கிடைப்பதில்லை. மேலும் சில குழந்தைகள் ஹெல்மெட் போட அடம் பிடிக்கும் சூழல் நிலவுகிறது.
என்ன செய்வது...
அப்படியே கட்டாயப் படுத்தி ஹெல்மெட் போட்டு விட்டாலும், குழந்தைகளை பள்ளிகளில் விட்டு விட்டு அலுவலகம் செல்லும் பெற்றோர், அந்த ஹெல்மெட்டை கையோடு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
பாவம் மாணவர்கள்...
இல்லையென்றால், புத்தகப்பை மற்றும் உணவுக் கூடையோடு ஹெல்மெட்டையும் பாதுகாக்க வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் ஆளாவார்கள். இத்தகைய காரணங்களால் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.