யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் கொள்கை?.. ரஜினிக்கு நல்லக்கண்ணு சுளீர்!
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் என்ன கொள்கை இருக்கிறது என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் என்ன கொள்கை இருக்கிறது என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மற்றும் ஈழம் தொடர்பான பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்றும் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதுதான் தற்போது தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எந்த தலைவர் பிரஸ் மீட் கொடுத்தாலும் அவர்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி மறக்காமல் எழுப்பப்படுகிறது.
இதற்கு பல்வேறு தலைவர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அது அவரது விருப்பம் உரிமை என்று கூறினாலும், பல அரசியல் கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து வருகின்றனர்.
நல்லக்கண்ணுவிடம் ரஜினி குறித்து..
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால் கொள்கை?
அதற்கு பதிலளித்த நல்லக்கண்ணு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் என்ன கொள்கை இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
ரஜினியின் நிலைப்பாடு என்ன?
மேலும் காவிரி, ஈழம் தொடர்பான பிரச்சனையில் ரஜினிக்காந்த்க்கு என்ன நிலைப்பாடு உள்ளது? என்றும் நல்லக்கண்ணு கேள்வி எழுப்பினார். சில திட்டங்களுக்கு ரஜினி நிதியுதவி செய்தது அரசியல் தீர்வாகாது என்றும் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
ஆணவக்கொலைகள் அதிகரிப்பு
மேலும் தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து விட்டன என்றும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றம் சாட்டினார். ஆணவக்கொலைகளை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் நல்லக்கண்ணு வலியுறுத்தினார்.
மே 27ல் மாநாடு
மேலும் ஆணவக் கொலைகளை தடுக்கக்கோரி மே 27 ஆம் தேதி மாநாடு நடத்தப்படுவதாகவும் நல்லக்கண்ணு அறிவித்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.