எங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும்… புது குண்டு போடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் கட்சி குனிந்து திராவிடக் கட்சிகளை சுமந்தது போதும்... இனி நாமும் சவாரி செய்ய வேண்டும் என்று போகும் இடமெங்கும் சொல்லி வருகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்பது மிகமுக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்தான் பேசி வந்தார். அதையே கெட்டியாக பிடித்துக்கொண்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசத் தொடங்கியிருக்கிறார்.
திருச்சியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. 23ம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சிக்கு வருகிறார் ராகுல்காந்தி எனவே கூட்டத்தை மாநாடு போல பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பேச்சோடு பேச்சாக சட்டசபைத் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசி வருகிறார்.
ஆட்சியில் சமபங்கு
காங்கிரஸ் மீது நாற்காலியைப் போட்டு ஆட்சி செய்வதை இனியும் அனுமதிக்க மாட்டோம். ஆட்சியில் சமபங்கை கேட்டு வாங்குவோம் என்பது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் அதிரடி ஸ்டேட்மென்ட்.
கவுரமான இடம் தேவை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உயிரைக் கொடுத்தாவது கவுரவமான இடத்தை நாம் பெறுவோம். உங்களுக்கு ஒரு நாற்காலி எனில், அருகில் எங்களுக்கும் ஒரு நாற்காலி போடவேண்டும்.
துணை முதல்வர் பதவி
உங்களுக்கு முதல்வர் பதவி என்றால், எங்களுக்கு துணை முதல்வர் பதவி. நிதித்துறை உங்களுக்கு எனில் காவல்துறை எங்களுக்கு என்ற நிலைதான் இனி இருக்கும் என்றார்.
கூட்டணி சேருவோம்
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுகவும், காங்கிரஸும் சிறந்த பணியை ஆற்று கின்றன. தேர்தல் நேரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறிவிட்டு ஏன்யா,... நான் சரியாத்தான் பேசறேனே? என்பதுபோல கட்சித் தொண்டர்களை பார்க்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
அப்போ காமராஜர் ஆட்சி?
234 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். ஆனால் கூடவே கூட்டணிக்கும் கூட்டணி ஆட்சிக்கு துண்டு போடுகிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
இன்னும் கேளுங்க…
வடிவேலு ஒரு படத்தில் பண உதவி கேட்கும் நபரிடம் இது போதுமா? இன்னும் ஏதாவது வேணுமா என்று கேட்பார். அதுபோல 63 தொகுதி கேட்டு வாங்கி 5 பேர் ஜெயித்த காங்கிரஸ் இம்முறை குறி வைத்திருப்பது துணை முதல்வர், காவல்துறை அமைச்சர் பதவி... அது சரி... கேட்டு வைப்போம்... கொடுக்கிறது கொடுக்காதது அவங்க இஷ்டம் தானே...