காவிரி பற்றி பேசும் சந்திரபாபு நாயுடு அவர்களே... பாலாறு பிரச்சனையில் தொடரும் வஞ்சகம் ஏனோ?
காவிரி பிரச்சனை குறித்து கரிசனையை வெளிப்படுத்தும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்காமல் இருப்பாரா? என கேள்வி எழுப்புகிறது தமிழகம்.
சென்னை: காவிரி பிரச்சனையால் தமிழகம், கர்நாடகா மாநில பெருமைகளுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக வருத்தப்படும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை காவு கொள்வது பற்றியும் பேசுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளா காவு கொண்டு வருகின்றன. கர்நாடகாவின் வஞ்சகத்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிட்டன.
500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். இந்திய நாட்டின் மதிப்புமிகு உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கர்நாடகா அரசு அதை செயல்படுத்த மறுத்து வருகிறது.
சந்திரபாபு நாயுடு பேச்சு
இதனால் தமிழகமே கொந்தளித்து போராடி வருகிறது. இந்த நிலையில் நதிநீர் இணைப்பு பற்றியும் காவிரி பிரச்சனை குறித்தும் திருவாய் மலர்ந்திருக்கிறார் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
களங்கமாம்...
காவிரி பிரச்சனையால் தமிழகம், கர்நாடகாவின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதே என கவலை தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணைகளை தொடர்ந்து கட்டி வருகிறது ஆந்திரா அரசு.
பாலாறு தடுப்பணைகள்
அதுவும் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பின்னர் பாலாற்றின் குறுக்கே பல இடங்களில் சிறியதும் பெரியதுமாக தடுப்பணைகள் கட்டப்பட்டன. இந்த தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து ஒரு தமிழக விவசாயி அணையிலேயே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது.
கபளீகரம்...
காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து கவலை தெரிவிக்கும் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தின் உரிமையை கபளீகரம் செய்வது மட்டும் எந்த விதத்தில் நியாயமாம்? பாலாற்றின் குறுக்கே தொடர்ந்து தடுப்பு அணைகளை கட்டுவதை கைவிட்டுவிட்டு காவிரி பிரச்சனையை பற்றி சந்திரபாபு நாயுடு பேசினால் அர்த்தம் உண்டு.
மறக்குமா தமிழகம்?
பாலாற்றை பாலைவனமாக்கிவிட்டு பவ்யமாக கருத்து தெரிவித்தால் எல்லாவற்றையும் தமிழகம் மறந்துவிடுமா என்ன? செம்மரம் வெட்ட சென்றதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த ஈவிரக்கமற்ற ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடூரத்தை தமிழகம் மறந்துவிடுமா?