தமிழ்நாடு இனி சூரிய மின் உற்பத்தித் திறனில் "தலைவர்" இல்லை!
சென்னை: சூரிய சக்தி உற்பத்தி திறனில் ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்கள் தமிழகத்தை பின் தள்ளி முன்னேறிப் போய் விட்டன.
இந்த துறையில் தமிழகம் இதுநாள் வரை முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் தற்போது ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களை நம்மை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டன. இனியும் நாம் இதில் "தலைவர்" இல்லை என்பது அதிர்ச்சிச் செய்தியாக வந்துள்ளது.
ஏற்கனவே நல்ல தலைமை இல்லாமல் தமிழ்நாடு தள்ளாடிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பல துறைகளில் தொடர்ந்து அது பின்னேறிக் கொண்டுள்ளது. அதில் சூரிய சக்தித் துறை தற்போது லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் மாற்று மின் உற்பத்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
3வது இடத்தில் தமிழகம்
கடந்த ஜூன் மாத நிலவரப்படி சூரிய மின்சார உற்பத்தி திறனில் 2010.87 மெகாவாட்டுடன் ஆந்திரா முதலிடத்தில் இருந்தது. 2வது இடத்தை 1961 மெகாவாட்டுடன் ராஜஸ்தான் பிடித்தது. தமிழகத்தின் உற்பத்தி திறன் 1697 மெகாவாட்டாக இருந்தது.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த 2015-16 ஆண்டு காலத்தில் தமிழகம் 919.24 மெகாவாட் சூரிய மின் சக்தி திறனுடன் இருந்தது. ஆனால் இது கடந்த 2016-17ல் 630 மெகாவாட்டாக சுருங்கிப் போய் விட்டது. அதே காலகட்டத்தில் ஆந்திராவின் உற்பத்தி 1294 மெகாவாட்டாக அதிகரித்திருந்தது. கர்நடாகம் 882, தெலுங்கானா 759 என உற்பத்தி செய்திருந்தன.
வேகமாக செயல்படும் ஆந்திரா
ஆந்திராவில் சூரிய சக்தி பூங்காக்கள் அமைப்பதற்கான நிலத்தை அந்த மாநில அரசே கையகப்படுத்துகிறது. இதனால் பணிகள் துரிதமாக நடக்கிறது.
பொறுப்பை தட்டிக் கழிக்கும் தமிழ்நாடு
ஆனால் தமிழகத்தில் அதை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களிடமே விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறது மாநில அரசு. இதனால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறதாம்.