மோசடி 'அப்ரோ யேசுதாஸ்' போலீஸில் சரண்.. மீண்டும் கைது
அப்ரோ நிறுவனத்தின் தலைவராக யேசுதாஸ், பொறுப்பு அதிகாரியாக தேவி ஆகியோர் இருந்தனர். இந்த நிறுவனத்துக்கு எண்ணூர் நேரு நகரில் கிளை அலுவலகம் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெண்களுக்கு கடன் உதவி தராமல் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து யேசுதாசையும், தேவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தற்போது யேசுதாஸ் "அப்ரோ" என்ற அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். இந்த கட்சியின் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 18ம் தேதி தேவியை கைது செய்தனர்.
இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று இரவு 7 மணிக்கு யேசுதாஸ் வந்தார். அப்போது அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாக பழைய வழக்குகளை முன்னெடுத்து போலீசார் செயல்படுகின்றனர். இப்போது நான் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளேன். என்னை கைது செய்வதோ, ஜாமீனில் அனுப்புவதோ அவர்கள் விருப்பம்' என்றார்.
மகளிர் சுய உதவி குழுக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும், ரிசர்வ் வங்கி உரிமம் இன்றி நிதி நிறுவனம் நடத்தியதாகவும் அப்ரோ நிறுவனத்தின் தலைவர் யேசுதாஸ் மற்றும் தேவி சிறிது நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே செய்யூர் அருகே உள்ள அரிக்கன் தாங்கலை சேர்ந்த ராஜேஸ்வரி, பொருளாதார குற்றப்பிரிவில் தேவி மீது புகார் அளித்தார்.
அதில் யேசுதாஸ், தேவி மூலம் அப்ரோ நிறுவனத்தில் 295 பெண்களை சேர்த்துவிட்டதாகவும், அவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக தலா ரூபாய் 5,600 வீதம் வசூலித்து ரூபாய் 20 லட்சத்தை பெற்றுக் கொண்ட யேசுதாஸும், தேவியும் கடனை பெற்றுத் தரவில்லை எனவும், கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்.
இப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேவியை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் யேசுதாஸை தேடி வந்தனர். இந்நிலையில் யேசுதாஸ், சென்னை அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை சரணடைந்தார். சரணடைந்த யேசுதாஸை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொருளாதார குற்றப்பிரிவில் சரணடைந்த யேசுதாஸ், கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, அப்ரோ என்ற புதிய கட்சியை நான் தொடங்கியுள்ளேன். இந்த கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் கடலூரில் நானும் விழுப்புரத்தில் தேவியும் போட்டியிட திட்டமிட்டிருந்தோம்.
இதைத் தடுப்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளோம். இதற்காக புதிதாக ஒரு புகார் பெறப்பட்டு எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. எங்கள் மீது எத்தனை வழக்குகள் தொடரப்பட்டாலும் அதை சட்டப்படி சந்திப்போம். மக்களவைத் தேர்தலில் தடையை மீறி போட்டியிடுவோம் என்றார்.