ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்
ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவேயில்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லை என்று அப்பல்லோ மருத்துவர் நளினி வாக்குமூலம் வெளியிட்டனர்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அறிக்கையை சமர்ப்பிக்க 2ஆவது முறையாக கால அவகாசம் கோரினார்.
அப்பல்லோ இணைந்தார்
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் நளினி ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று ஆஜரானார். நளினி கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி அப்பல்லோவில் பணியில் சேர்ந்துள்ளார்.
சிறப்பு வார்டில்
அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு நளினி பணியில் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவர் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டில் பணியில் இருந்தார்.
ஜெ. லேசாக புன்னகை
ஆறுமுகசாமி ஆணையத்தில் நளினி கூறுகையில் நான் பணியில் இருந்த போது, ஜெயலலிதா யாரிடமும் பேசியது இல்லை. ஜெயலலிதாவை சசிகலா பார்க்கவில்லை. நான் வார்டுக்குள் செல்லும் போது சில நேரங்களில் என்னை பார்த்து ஜெயலலிதா லேசாக புன்னகை உதிர்த்துள்ளார்.
மூளை செயலிழந்தது
ஜெயலலிதா மரணம் அடைந்த டிசம்பர் 5-ஆம் தேதியும் நான்தான் பணியில் இருந்தேன். அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்துவிட்டன. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் மூளையும் செயல் இழந்துவிட்டது என்று தனது வாக்குமூலத்தில் மருத்துவர் நளினி கூறி உள்ளார்.