ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தார் ஜெ.... அப்பல்லோ பிரதாப் ரெட்டி திடீர் பல்டி
ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலையிலேயே கொண்டு வரப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி திடீரென பல்டி அடித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த தகவல் பரவியதும் பொதுமக்களும், தொண்டர்களும் கூடினர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு காய்ச்சல் இல்லை. வழக்கமான உணவுகளையே உட்கொள்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மருத்துவ அறிக்கை
இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தீவிர சிகிச்சை
ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறுகையில், ஜெயலலிதா நன்றாக உள்ளார். புதிய நோய் தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காகவே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரது சுவாசம் சீராக உள்ளதால் 15 நிமிடங்கள் மட்டுமே செயற்கை சுவாசம் பொருத்தப்படுகிறது என்றார்.
வீடு திரும்பாத ஜெ.
இதைத் தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் ரெட்டி, மேடம் ஜெயலலிதா விரும்பும் போது வீடு திரும்பலாம் என்று தெரிவித்தார். இந்த வார்த்தை தொண்டர்களுக்கு ஆறுதலை தந்தது. ஆனால் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
தனியார் தொலைகாட்சி நிறுவனம் வெளியீடு
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் தொலைகாட்சி நிறுவனம் ஒன்று அப்பல்லோ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி ஜெயலலிதா அரைமயக்க நிலையிலேயே அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு சர்க்கரை அளவு உயர்ந்தும், ஆக்ஸிஜன் அளவு குறைந்தும் காணப்பட்டது என்றும் அந்த அறிக்கை பல்வேறு திடுக் தகவல்களை வெளியே கொண்டு வந்தது.
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது. அந்த ஆணையம் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என விசாரணை நடத்தி வருகிறது.
திடீர் பல்டி
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறுகையில், ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையில் நடப்பதால் வேறு எதும் கூற இயலாது.
உண்மை மறைத்தது ஏன்
எங்களது மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையத்திடம் இருந்து சம்மன் வந்துள்ளது. ஆனால் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று அறிக்கை தரப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக் கூடாது என்பதாலேயே உண்மை நிலை மறைத்து அறிக்கை வெளியிட்டோம் என்று அவர் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார்.