ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸை ஓட்டி வந்த போதை ஆசாமி... அதிர்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனை கூப்பாடு
சென்னை மதுரவாயலை சேர்ந்த ஒருவர் ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அடுத்து ஆம்புலன்ஸை காணாது அப்பல்லோ நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது.
சென்னை: உறவினரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்ற ஒருவர், போதையில் தனது ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரவாயலை சேர்ந்தவர் நிக்கல்சன். இவர் தனது உறவினருக்கு உடல்நிலை பாதிப்பு என்பதால் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக தனது ஆடி காரில் சென்றிருந்தார்.
அப்போது உறவினரை சேர்த்து விட்டு போதையில் இருந்த நிச்சல்சன், வெளியே இருந்த தனது ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி சென்றார். காரில் சென்ற கணவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்ததை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
இதனிடையே ஆம்புலன்ஸ் வாகனத்தை யாரோ திருடி விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை ஆயிரம் விளக்கு போலீஸாரிடம் புகார் அளித்தது. இதை அறிந்த நிக்கல்சன் பதறி அடித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.
இதையடுத்து போதையில் இருந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கில் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் சென்று வரும் பிரபல மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.