ஐசியூவில் சிசிடிவி இல்லை என்று யார் சொன்னது? அப்பல்லோ வெப்சைட்டில் ஆதாரம் இதோ!
ஐசியூவில் சிசிடிவி வசதிகள் இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிசிடிவி கேமராக்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் உண்டு என்று அந்த மருத்துவமனையின் இணையதளத்தில் குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை போக்குவதற்காக விசாரணை கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை கமிஷனுக்கு வரவேற்பு
டெல்லியில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி கூறுகையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை கமிஷன் நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி இல்லை. எனவே மருத்துவமனை பாதுகாப்பு காரணங்களுக்காக மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். விசாரணை கமிஷனின் விசாரணைக்கு முழு ஒத்தழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
நடந்தது என்ன
தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய களஆய்வில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சுயநினைவின்றி இருந்தார் என்றும் அவரது சர்க்கரை அளவு 508 எம்.ஜி. ஆக இருந்தது என்றும் அவருக்கு காய்ச்சல் இல்லை என்றும் நோயாளிகள் பற்றிய முதல் கட்ட குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அளித்த பதிலில் மற்றொரு சந்தேகம் எழுந்துள்ளது.
இணையதளத்தில் என்னென்ன
அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியூவில் மிகவும் அசாதாரண சூழலில் உள்ள நோயாளிகளின் நிலை குறித்து அவரது உறவினர்கள் எந்த மூலையில் இருந்தாலும் கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் செல்போன் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளதாக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், முதல் முயற்சியாக அப்பல்லோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் பவுன்டேன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஐசியூவில் அவர்களது உறவினர்கள், நண்பர்களின் உடல் நிலையை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக கணினி வசதி
தீவிர சிகிச்சை பிரிவில் மிகவும் மோசமான உடல்நிலையை கொண்டவர்களை மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். நோயாளிக்கு அதிகபட்சம் சிகிச்சை கிடைக்கவும், நோய் தொற்று போன்றவற்றை தடுக்கவும் நோயாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் அவ்வப்போது ஐசியூ செல்வதை குறைப்பதற்காகவும் இதுபோன்ற கணினி வழியாக கேமராவில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோயாளி முன்னரே கேட்பர்
மேலும் நோயாளியின் நிலையை அறிய வரும் மருத்துவரிடம் நோயாளி இருக்கிறார் என்றும் பாராமல் அவரது உடல் நிலை குறித்து கேட்பதை தவிர்ப்பதற்காக கணினி மூலம் மருத்துவர்களும் இருந்த இடத்திலிருந்தே பார்த்து கொள்ளும் வகையில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளால் அங்கீகரிக்கப்படும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும். நோயாளி படுத்திருக்கும் படுக்கையின் மேல் உள்ள சுவிட்சை ஆன் செய்தால் கேமராவின் இயக்கம் தொடங்கிவிடும். அதன்பின்னர் மிகவும் துல்லியமாக, ஈசிஜி அளவுகள் உள்பட அனைத்தையும் பார்க்கலாம்.
7 நாட்களும்..
இந்த வசதியை 24 மணி நேரமும் பெறலாம். இதன் மூலம் நோயாளியின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும். இந்த வசதி குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயனுடையதாக இருக்கும். நோயாளியை பரிசோதிக்க வரும் மருத்துவர்களும் அவர்களின் நிலை குறித்து உறவினர்களுக்கு விளக்க முடியும். இத்தகைய வசதிகள் இருக்கும் நிலையில் சிசிடிவி கேமராக்களே இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.