ஜெயலலிதா உடல்நிலையும்... டாக்டர் பிரதாப் ரெட்டியின் நம்பிக்கை வார்த்தைகளும்...
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் எழுந்து நடமாட வேண்டியதுதான் பாக்கி என்று அதிமுக தொண்டர்களுக்கு உற்சாக டானிக் கொடுத்திருக்கிறார் டாக்டர் பிரதாப் ரெட்டி.
சென்னை: ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுவரை அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது மருத்துவமனை சார்பில் அவரது உடல்நலம் குறித்து 11 அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதகாலமாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியே முதல்வர் உடல்நிலை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.
ஜெயலலிதா மிகவும் நலமாக உள்ளார். வழக்கமான உணவுகளையே உட்கொண்டு வருகிறார். செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுவிட்டது. இயற்கையாகவே அவர் சுவாசித்து வருகிறார். அவர் விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம். தொற்று மீண்டும் ஏற்படாமல் இருக்கவே, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார் பிரதாப் ரெட்டி.
குணமடைந்து விட்டார்
நவம்பர் 12ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதாப் ரெட்டி, முதல்வர் தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார். இப்போது உள்ள தேவை என்றால், வீடு திரும்புவதற்கு, அவர் தன்னை தெம்பாக்கிக்கொள்ள வேண்டும். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
சிகிச்சையில் மாற்றம் இல்லை அறை மாற்றம் என்பது கூட முதலமைச்சரின் வசதிக்காகத்தான் என்று கூறினார்.
டிஸ்சார்ஜ் எப்போது?
இப்போது தேவை அவர் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும். அதற்காகத்தான் டாக்டர்கள் குழு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதை அவர் தான் முடிவு செய்வார். அவர் எப்போது, தான் பூரண குணமடைந்து உடல் தகுதி பெற்றுவிட்டோம். மருத்துவமனை சிகிச்சை போதும் என்று நினைக்கிறாரோ அப்போது அவர் வீடு திரும்புவார் அவர் டிஸ்சார்ஜ் ஆவது பற்றி எந்த தேதியும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறினார்.
நடப்பதுதான் பாக்கி
சமீபகாலமாக, ஜெயலலிதா உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடும் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் எப்போது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழு உடலுக்கும் பிசியோதெரபி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், முதல்வர் ஜெயலலிதா எழுந்து நடக்க வேண்டியது தான் அடுத்த நிலை என்றும் கூறியுள்ளார்.
தொண்டர்கள் உற்சாகம்
முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பர் 19ம் தேதி ஐசியுவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். டாக்டர் பிரதாப் ரெட்டியின் இன்றைய அறிவிப்பு அதிமுக தொண்டர்களுக்கு மேலும் உற்சாகமளித்துள்ளது.
2 மாத கால சிகிச்சை
முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்து 64 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. தலைமைச் செயலகம் வந்து 65 நாட்களாகிவிட்டது. அதிமுக அமைச்சர்களும், அதிகாரிகளும் தினசரியும் அப்பல்லோவிற்கு வந்து ஆலோசனை நடத்தி விட்டு செல்கின்றனர். ஜெயலலிதா நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தொடர்ந்து வருகின்றன.