ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது... அப்பல்லோ செவிலியர் அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பதே எங்களுக்கு தெரியாது என்று செவிலியர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா எந்த நோய்க்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றே எனக்கு தெரியாது என்று செவிலியர் பிரேமா ஆண்டனி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
உடல்நிலை பாதிப்படைந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மரணமடைந்தார்.
இவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் இதுவரை ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் நளினி மற்றும் நர்ஸ் பிரேமா ஆண்டனிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
நீதிபதி விசாரணை
அதன்படி நேற்று இருவரும் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார். இதுமட்டுமில்லாமல் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்த சாரதி, நிரஞ்சன்ஆகியோர் இருவரிடமும் குறுக்கு விசாரணை செய்தனர்.
எந்த சிகிச்சை
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை பிரேமா மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து வழங்கப்படுகிறதா?, எந்தெந்த நேரத்தில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற மருத்துவக்குறிப்பு சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
மருத்துவக் குறிப்புகள்
விசாரணையில் நர்ஸ் பிரேமா கூறுகையில் ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது என்றார். இதை கேட்ட ஆறுமுகசாமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருந்து, சிகிச்சைக்கான மருத்துவக் குறிப்புகளை கண்காணித்து வந்த உங்களுக்கு அவர் என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பது எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
வெறுப்பா
குறிப்பிட்ட மருந்து எந்த நோய்க்கு வழங்கப்படுகிறது என்று தெரிந்தால்தானே நீங்கள் மற்ற செவிலியர்களை எப்படி கண்காணிக்க முடியும் என்று கேட்டதற்கு நோய் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்றார். அவ்வாறு தெரிந்து கொள்ளாததற்கு ஜெயலலிதா மீது உங்களுக்கு வெறுப்பா என்று கேட்டபோது அதெல்லாம் இல்லை என்றார்.
மீண்டும் விசாரணை
இந்த பதில்களை பிரேமாவே தருகிறாரா அல்லது அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு அளித்த பதிலா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நர்ஸ் பிரேமாவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.