பாரா ஒலிம்பிக்.. பதக்கம் வென்று அசத்திய மாரியப்பன் உள்பட 4 பேருக்கு பாராட்டு விழா
பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை: பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உள்பட 4 பேருக்கு சென்னையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடந்தது.
மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் 19 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று அசத்தியது.
தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். வட்டு எறிதலில் தேவேந்திர ஜாஜாரியா (ராஜஸ்தான்) தங்கம் வென்றார். குண்டு எறிதலில் தீபா மாலிக் (அரியானா) வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுலில் வருண்சிங் (உத்தரபிரதேசம்) வெண்கல பதக்கமும் பெற்றனர். பதக்கம் வென்ற வீரர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. மத்திய அரசு சார்பில் வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு சென்னையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடந்தது. ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாரியப்பனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான கார் சாவி அவரிடம் கொடுக்கப்பட்டது. தேவேந்திர ஜாஜாரியா, தீபா மாலிக், வருண்சிங் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டது.