ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கிறோம்... ரவிசங்கர் பிரசாத், பொன்னார் உறுதி
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , மத்திய அமைச்சர் ஜாவடேக்கரை சந்தித்து ஏற்கனவே பேசியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை மதிய அரசு ஏற்கனவே செய்துள்ளது. தொடர்ந்து தேவையான உதவிகள் வழங்கப்படும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தது பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான். இந்த சந்திப்பை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா சபையும் வரவேற்றுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது. இதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். இதற்கான தடையை மத்திய அரசு பரிசீலனை செய்து நீக்கும் என்றார்.