செம்மரத்துக்காக 20 தமிழர்களின் செங்குருதியைக் குடித்த ஏப்ரல்!
சென்னை: 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக மக்களுக்கு மறக்க முடியாதது. 20 தமிழகத் தொழிலாளர்களை காக்கை, குருவியைப் போல சுட்டுக் கொன்று ஆந்திர போலீஸார் வெறியாட்டம் போட்ட மாதம் இது.
செம்மரம் வெட்டியவர்களை மொத்தமாக ஓரிடத்தில் திரட்டி நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றனர் ஆந்திர போலீஸார். இதை மறைக்க அவர்கள் தாக்கினார்கள், பதிலுக்கு சுட நேரிட்டதாக கதையும் விட்டது ஆந்திர போலீஸ்.
தமிழர்களின் செங்குருதி செம்மரத்திற்காக வீணாக சி்ந்திய மாதம் இது. இந்த மாதத்தின் பிற முக்கிய நிகழ்வுகள்:
கேரளாவில் மது பார்கள் மூடல்
ஏப்ரல் 1ம் தேதி கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப் படி மது பார்கள் இழுத்து மூடப்பட்டன. நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முகம்மது புகாரி அதிபராக வெற்றி பெற்றார்.
20 தமிழர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸ்
ஏப்ரல் 7ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் குருவியைச் சுடுவது போல சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இ.எம். ஹனீபா - ஜெயகாந்தன் மறைவு
ஏப்ரல் 8ம் தேதியன்று பிரபல பாடகர் நாகூர் இ.எம். ஹனீபாவும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று மரணத்தைத் தழுவினர்.
யாகூப் மேமனுக்கு தூக்கு உறுதி
ஏப்ரல் 9ம் தேதி மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஏமனிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்
ஏப்ரல் 11ம் தேதி ஏமனில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆபரேஷன் ரஹத் என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் 4640 இந்தியர்களை இந்தியா மீட்டது. இதுதவிர பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மீட்டு வந்து இந்தியா அசத்தியது.
லீவு முடிந்து திரும்பிய ராகுல் காந்தி
விடுமுறையில் போயிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஏப்ரல் 16ம் தேதி நாடு திரும்பினார்.
850 அகதிகள் பலி
ஏப்ரல் 19ம் தேதி மத்திய தரைக் கடலில் மிகப் பெரிய அளவிலான இடம் பெயர்ந்தோருடன் வந்த படகு, தன்னை மீட்க வந்த போர்ச்சுகீசிய படகு மீது மோதி கவிழ்ந்ததில் 850 பேர் பலியானார்கள்.
நேபாள நிலநடுக்கம்
ஏப்ரல் 24ம் தேதி நேபாளத்தை மிகப் பெரிய நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவாகிய அந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4000 பேர் பலியானார்கள்.
நீது அகர்வால் கைது
ஏப்ரல் 26ம் தேதி செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை நீத்து அகர்வால் கைது செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழருக்குத் தூக்கு
ஏப்ரல் 29ம் தேதி இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மலாலா குற்றவாளிகளுக்கு 25 ஆண்டு சிறை
ஏப்ரல் 30ம் தேதி பாகிஸ்தான் கோர்ட் அளித்த தீர்ப்பில், மலாலாவை சுட்டுக் கொல்ல முயன்ற 10 தலிபான் தீவிரவாதிகளுக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.