ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்ததால் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு... ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
டெல்லி : முகமது நபி பெயர் சூட்டப்பட்ட ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்துள்ளார்.
முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக 'பத்வா' எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகடாமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்தது பற்றி ஏ.ஆர். ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது " நான் அந்த படத்தை தயாரிக்கவோ அல்லது இயக்கவோ இல்லை. வெறும் இசை மட்டும் தான் அமைத்துள்ளேன்.
Posted by A.R. Rahman on Monday, September 14, 2015
இந்த படத்தில் வேலை செய்தது மூலம் எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்துக்கொள்ள விருப்பம் இல்லை. நான் இந்த படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு. இது தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.