தமிழா... தமிழா.. கண்கள் கலங்காதே.. பாடலுடன் உண்ணாவிரதத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்து ஆஸ்கர் தமிழன் ஏஆர்.ரஹ்மான் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்து ஆஸ்கர் தமிழன் ஏஆர்.ரஹ்மான் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை உண்ணாவிரதம் இருந்த அவர், பழச்சாறு குடித்தும் தமிழா... தமிழா.. பாடலை பாடியும் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஒட்டு மொத்த தமிழகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இளைஞர்களின் போராட்டத்தைக் கண்டு வியந்து போன ஏஆர் ரஹ்மான் தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 4.30 மணிக்கு தனது வீட்டில் உண்ணாவிரதத்தை தொடங்கிய ஏஆர்.ரஹ்மான் மாலை 6 மணிக்கு பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். 6 மணியளவில் பெரிஸ்கோப் இணையத்தில் லைவ்வாக பேசினார்.
அப்போது இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. நல்ல முடிவு வரும் என நம்புகிறேன் என்று பேசினார். மேலும் தமிழா.. தமிழா கண்கள் கலங்காதே" விடியும் விடியும் உள்ளம் மயங்காதே.. என்வீடு தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா.. என்நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா என்ற பாடலையும் பாடி ஏஆர்.ரஹ்மான் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.