எம்.எஸ்.ஸுக்குப் பிறகு முதல் முறையாக ஐ.நா.வில் ஒரு இந்தியக் கச்சேரி.. 50 ஆண்டுகளுக்குப் பின்!
சென்னை: சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா சபையில் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
அடுத்தமாதம் 15ம் தேதி இந்தியாவின் 69-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதை ஐநா சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்த உள்ளார். அன்றைய தினம் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களை கேட்க 193 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஐ.நா. சபைக்கு வர உள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 1966ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மற்றொரு இந்தியரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய, நடத்த இருக்கும் இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச அளவில் 2 கிராமி விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், ஒரு தடவை 'கோல்டன் குளோப்' விருது பெற்றுள்ளார். எனவே, அவருக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.