லண்டன் கச்சேரியில் இந்திக்காரர்கள் கலாட்டா... கனடாவில் இரு மொழி கச்சேரியை அறிவித்த ரஹ்மான்!
லண்டன் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட பிரச்னையையடுத்து கனடா இசைக் கச்சேரியில் இரண்டு மொழிகளில் கச்சேரி நடத்தப்படும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரியில் இந்தி, தமிழ் என்று இரண்டு மொழிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.
கடந்த ஜுலை மாதம் லண்டனில் உள்ள வெம்ப்லே பகுதியில், நேற்று இன்று நாளை என்ற பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது தெரியாத பல வட இந்தியர்கள், இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடியதால், வட இந்தியர்கள் பாதியிலேயே வெளியேறியதோடு, டிக்கெட் கட்டணத்தையும் திருப்பியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதால் சர்ச்சை எழுந்தது.
தமிழில் பாடிய ரஹ்மான்
மொழிப்பிரச்னையால் சர்ச்சை எழுந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து தமிழில் பாடினார் ரஹ்மான். இது தமிழ் மொழிப் பாடல்களுக்கான கச்சேரி என்றே அறிவிக்கப்பட்டதால் அதில் உறுதியாக இருந்து தமிழ்ப்பாடல்களையே பாடினார் ரஹ்மான்.
மொழி சர்ச்சை
ரஹ்மான் கச்சேரியில் எழுந்த மொழிப்பிரச்னையால் சமூக வலைதளங்களில் வட இந்தியர்களுக்கும், தென் இந்தியர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஆனால் ரஹ்மானை மொழியால் பிரிக்க வேண்டாம் என்றும், இந்தியாவை இசையால் இணைக்கும் அந்த மனிதரை நேசிப்போம் என்றும் ரஹ்மானின் சகோதரி ரெஹானா கூறியிருந்தார்.
கனடாவில் இரண்டு மொழியில்
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் இரண்டு நாட்கள் இசைக்கச்சேரி நடத்த உள்ளார். இந்த முறை சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு மொழிகளில் அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு கச்சேரி திட்டமிடப்பட்டுள்ளதாக ரஹ்மான் தன்னுடைய முகநூலில் கூறியுள்ளார்.
இரண்டு நாள் கச்சேரி
அக்டோபர் 20ம் தேதி இந்தியிலும், அக்டோபர் 21ம் தேதி தமிழிலும் இந்த இசைக்கச்சேரிக்கு திட்டமிடப்பட்டள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பெற்று மக்கள் நேரில் இலைக் கச்சேரியை கேட்டு மகிழலாம் என்றும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
கரெக்டா போங்கப்பா
இந்த அறிவிப்புக்கு அவரது முக நூலிலேயே சரமாரியாக கமெண்டுகள் குவிகின்றன. வட இந்தியர்களே உங்களுக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த அமைதியான பதிலடி இது. கரெக்டா டேட் பார்த்துப் போய் உட்காருங்க. தப்பான தேதியில் போய் மறுபடியும் வம்பு பண்ணாதீங்க என்று கூறி நக்கலடிக்கின்றனர் பலர்.