அரபிக் கடலில் புயல் சின்னம்... ஆனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை – வானிலை மையம்
சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடையின் உச்சகட்டமான "அக்னி நட்சத்திரம்" கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாகைருந்த காரணத்தினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தமிழகத்தில் "அக்னி நட்சத்திரம்" நிறைவடைந்த போதிலும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
எனினும், அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம், வளைகுடா நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தற்போது அரபிக் கடலையொட்டியுள்ள கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கேரளாவையொட்டியுள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை காணப்படுகிறது.