தகதகவென தகிக்கும் அரக்கோணம் தொகுதி.. ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் மோதல்.. ஜெயம் யாருக்கு?
Recommended Video
சென்னை: இந்தியாவிலேயே ஹாட்டான நகரம் என்றால் அது அரக்கோணம்தான். இந்த தொகுதி எம்பி தேர்தலை வேறு சந்திக்கவுள்ளதால் நகரமே சூடு பிடித்துள்ளது.
கோடை காலங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தகிக்கும் அரக்கோணம் தொகுதி திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகி. 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இந்த தொகுதியில் திமுக, பாமக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இவர்களில் அமமுக சார்பில் போட்டியிடுபவர் என் ஜி பார்த்திபன். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சோளிங்கர் சட்டசபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தினகரன் வாய்ப்பு
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் என் ஜி பார்த்திபனுக்கு தினகரன் வாய்ப்பு கொடுத்துள்ளார். எம்எல்ஏவாக இருந்த போதே இவர் தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் ரிசார்ட் ரிசார்ட்டாக சென்று ஊஞ்சல் விளையாடியவர் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனால் அவர் 3 அல்லது 4ஆம் இடத்துக்கு தள்ளப்படுவார் என்றே தெரிகிறது.
அதிமுக, திமுக
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் அப்பகுதி மக்களுக்கு லேசாக அறியப்பட்டவர். இதனால் திமுக, பாமக ஆகிய இரு வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவும். திமுக சார்பில் கல்வியாளர் ஜெகத்ரட்சகன் களம் காண்கிறார். அது போல் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏகே மூர்த்தி களம் இறங்குகிறார்.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?
யார் ஜெகத்ரட்சகன்
ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதிக்கு 3 முறை எம்பியாக இருந்தவர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
பாரத் பல்கலைக்கழகத்தின் உரிமையாளரான இவர் இது வரை 30 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் ஒரு புத்தகம் மதர் தெரஸாவால் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முதலாக தொழில்நுட்ப கல்லூரியை தொடங்கிய முதல் அரசியல்வாதியாவார்.
மக்கள் சாய்ஸ் எது
நிலக்கரி மோசடி சம்பவத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டார். இவருடைய மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு ரூ. 20 லட்சம் பெற்றதாக ஸ்டிங் ஆபரேஷனில் தெரியவந்தது. எனவே இவரை மக்கள் தேர்வு செய்வரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
யார் இந்த மூர்த்தி
அது போல் ஏகே மூர்த்தியை எடுத்துக் கொண்டால் அவரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இது வரை அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டதில்லை. ரயில்வே அமைச்சராக 2002-ஆம் ஆண்டு இருந்தார். செங்கல்பட்டு தொகுதிக்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் செங்கல்பட்டு தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றவர்.
கடும் போட்டி
குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி ரயில்களில் தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக இத்திட்டம் தொடங்கப்பட்டது. பயணிகளுக்காக ஏராளமான ரயில்களை இயக்க வைத்தார். செங்கல்பட்டு தொகுதி மக்களின் மனங்களை அள்ளிய மூர்த்தி அரக்கோணம் தொகுதியில் ஜொலிப்பாரா என்பதை பார்க்க வேண்டும். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போட்டி சற்று கடுமையாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.