மயக்க ஊசிபோட்டு சிறுமியை சீரழித்த ஆரணி அரசு டாக்டர், உதவியாளர் அதிரடி கைது!
ஆரணி அரசு மருத்துவரும் அவரது உதவியாளரும் சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சிறுமியை மயக்க ஊசி போட்டு பல மாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய மருத்துவரும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்த ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர் சென்னைக்கு பிழைப்புக்காக குடிபெயர்ந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மகள் இருக்கிறார். அவரது மகளை உறவினர் சித்ரா என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆரணிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு, சித்ராவுக்கு பழக்கமுள்ள ஆண்கள் சுரேஷ் மற்றும் சுரேஷின் நண்பர்கள் சிலர் அவரை தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதில் அரசு மருத்துவர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரும் சிறுமியை சீரழித்துள்ளனர். இதனால், சிறுமியின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து அவரை தாயார் ராணி சென்னைக்கே அழைத்து வந்துவிட்டார். அப்போதுதான் தாயாரிடம் நடந்த விஷயங்களைக் கூறியுள்ளார். அதையடுத்து ராணி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் ஆரணிக்கு சித்ராவையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய சென்றனர். அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில், தனிப்படை போலீசார் அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் பாண்டியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.