அரசு கேபிள் டி.வி. மூலம் இல்லந்தோறும் இன்டர்நெட் சேவை: ஜெயலலிதா
சென்னை: அரசு கேபிள் டி.வி. மூலம் இல்லம் தோறும் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். கிராமங்கள் மற்றும், நகரங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. அப்போது பேசிய முதல்வர் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழ்நாடு பைபர் நெட்வொர்க் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். கிராமங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் தொடர்பு ஏற்படுத்துவதே இதன் நோக்கம், 12,524 ஊராட்சி கிராமங்கள் இணையம் மூலம் இணைக்கப்படும். அரசு சேவைகள் இணையம் மூலம் பெற முடியும்.
இதற்கென ஆப்டிகல் பைபர், கிராமங்களில் பதிக்கப்படும். மத்திய அரசு உதவியுடன் 3 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசு நிறைவேற்றும். அனைத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் இணைய சேவை இணைப்பு வழங்கப்படும், இணையதள வழி டிவி கொண்டு வரப்படும்.
இ - சேவை மையங்கள் வழியாக அரசு உதவி பெறும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10,034 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 70 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் இணையம் மூலம் கூடுதலாக 300 சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா புதுக்கோட்டையில் காதுகேளாதாவர்களுக்கான பள்ளி கட்டத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் கட்ட 110 விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மாற்று திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகள் வழங்கப்படும் என்றார்.
முன்னதாக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, வடசென்னையில் மின்பற்றாக்குறையை போக்க, புதிதாக துணை மின்நிலையம் அமைக்கப்படுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வடசென்னை பகுதிகளில், மின்பற்றாக்குறை பிரச்சனையை போக்க, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
புதிதாக துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, புதுக்கோட்டை கீழமஞ்சக்கரை மற்றும் வடக்குப்பட்டியில் உலர்களம் அமைக்கப்படுமா என அத்தொகுதி எம்.எல்.ஏ., தொண்டைமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 366 உலர்களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், உலர் களங்கள் தேவைப்படும் இடங்களில் அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.