அரசு கேபிளுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் - சென்னை, மதுரையில் அம்மா திருமண மண்டபம்
அரசு கேபிளுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் சென்னையில் நான்கு இடங்களிலும் , மதுரையில் ஒரு இடத்திலும் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் நான்கு இடங்களிலும் , மதுரையில் ஒரு இடத்திலும் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல அரசு கேபிளுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2011 - 16 ஆட்சி காலத்தில் பல்வேறு அம்மா திட்டங்களை அறிவித்தார். அம்மா உணவகம் , அம்மா உப்பு, அம்மா குடிநீர் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் அவர் மறைந்த பிறகு புதிய அம்மா திட்டங்கள் குறித்த அறிவிப்பு ஏதுவும் வெளியாக வில்லை.
இந்தநிலையில் சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அம்மா திருமண மண்டபம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல் படி சென்னையில் நான்கு இடங்களிலும் , மதுரை ஒரு இடத்திலும் அம்மா திருமண மண்டம் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி , சென்னையில் கொரட்டூர், வேளச்சேரி, பருத்திப்பட்டு மற்றும் அயம்பாக்கத்தில் அம்மா திருமண மண்டபம் கட்டப்படும். மதுரை அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அம்மா திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச செட்டாப் பாக்ஸ்
அரசு கேபிள்துறை சார்பில் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார். தமிழக அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.