இளம் விஞ்ஞானி ரிபாஃத்துக்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ ரூ.1 லட்சம் பரிசு
இளம் விஞ்ஞானி ரிபாஃத் ஷாரூக்கிற்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார்.
அரவக்குறிச்சி: சிறிய செயற்கைகோளை வடிவமைத்த இளம் விஞ்ஞானிக்கு ரிபாஃத் ஷாரூக்கிற்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ரூ. 1 லட்சம் பரிசு வழங்கினார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக். கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார்.
நாசா நடத்திய போட்டியில் கலந்து கொண்ட இவர் சிறிய வடிவிலான செயற்கைக்கோளை வடிமைத்துள்ளார். 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.
நாசா ஏற்பு
முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவனின் அறிவியல் திறன் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
விண்ணில் செலுத்தியது
மேலும் இவர் வடிவமைத்த செயற்கைகோளை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நாசா விண்ணில் செலுத்தியது. இதனால் அந்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ரூ.10 லட்சம் நிதியுதவி
இந்நிலையில் இவரது சாதனைக்கு தமிழக சட்டசபையில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இன்று அந்த மாணவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ரிபாஃத்துக்கு பாராட்டு
அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவர் ரிபாஃத் அங்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ரூ.1 லட்சம் நிதியுதவி
மேலும் அவரது சாதனைகளை பாராட்டி ரூ.1 லட்சம் பரிசை செந்தில் பாலாஜி வழங்கினார். ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்ய தயாராக உள்ளதாக செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.