அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் கே.சி. பழனிச்சாமி, அஞ்சுகம் வேட்புமனு தாக்கல்
அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் கே.சி. பழனிச்சாமியும், அஞ்சுகம் பூபதியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை: அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமியும் அஞ்சுகம் பூபதியும் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுக அறிவித்தன.
இதனையடுத்து, திமுக வேட்பாளரான கே.சி. பழனிச்சாமி அரவக்குறிச்சி தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது, எ.வ. வேலு, சின்னச்சாமி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
இதே போன்று தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் இன்று செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர். உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.
வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் அஞ்சுகம் பூபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெருவேன். அதிமுக ஆட்சி ஒரு செயலற்ற ஆட்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்படும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படுவதில்லை. அந்தக் குறைகளை முறையிட்டு திமுக சார்பில் தீர்த்து வருகிறோம். எனவே, நாங்கள் செய்த நல்லதைச் சொல்லி வாக்கு சேகரிப்போம். தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொண்டால் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெருவோம் என்று அஞ்சுகம் பூபதி கூறினார்.
இந்த 2 தொகுதிகளிலும் கடந்த மே மாதமே தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்ததையடுத்து தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனையடுத்து, வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
வேட்புமனுக்களை அளிக்க நவம்பர் 2ம் தேதி கடைசியாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 5ம் தேதியும் கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெற உள்ளது.