தீனதயாளன் சாதா சிலை திருடன் இல்லை.. தில்லாலங்கடி திருடன்.. "ஷாக்"கில் தொல்லியல்துறையினர்!
சென்னை: சிலைத் திருட்டு மற்றும் கடத்தலில் ஈடுபட்டு சிக்கியுள்ள ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளன் தமிழகத்தில் உள்ள பழங்காலக் கோவில்கள் அனைத்தின் விவரமும் அடங்கிய புத்தகம் ஒன்றை வைத்து தனது தொழிலை நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதை விட அந்தப் புத்தகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து புராதன கோவில்களின் விவரம், அதில் உள்ள சிலைகளின் விவரம், அவற்றின் மதிப்பு, காலம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக உள்ளது. இதனால் மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு தீனதயாளன் செயல்பட்டு வந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் புத்தகத்தைப் பார்த்த டெல்லியிலிருந்து ஆய்வுக்காக வந்துள்ள தொல்லியல்துறை நிபுணர்கள் குழுவினர் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனராம். அரசு அதிகாரிகளிடம் கூட இந்த அளவுக்கு விரிவான விவரம் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் சத்திய பாமா, தமிழக தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி உள்ளிட்டோர் அடங்கிய 13 பேர் கொண்ட குழு தீனதயாளன் வீட்டில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் முன் தீனதயாளன் நான்காவது நாளாக இன்றும் ஆஜர்படுத்தப்பட்டார்.
தஞ்சாவூர், நாகப்பட்டனம், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களில் இருந்து சிலை திருடப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் புராதான கோயில்களின் முழு வரலாற்று விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் அவரிடம் உள்ளதும் கண்டறியப்பட்டதால் தொல்லியல் நிபுணர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தென் மாவட்ட கோயில் ஒன்றில் காவலாளியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கு ஒன்றும் தீனதயாளன் மீது நிலுவையில் உள்ளது. இதனிடைய தீனதயாளன் வீட்டில் பழங்கால மரச்சிற்பங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. சிலைக் கடத்தலில் தொடர்புடைய தீனதயாளன் அடிக்கடி வீட்டை மாற்றியமைத்ததாக தகவல் தெரிய வந்துள்ளதால் வீட்டின் பல இடங்களில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீனதயாளனுக்கு இன்னொரு வீடும், குடோனும் இருக்கிறதாம். அங்கும் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கும் சோதனை நடத்தப்படவுள்ளது.