'டம்மி' பதவியில் இருந்து 'டபுள் டம்மி' பதவிக்கு தள்ளப்பட்ட ஆற்காடு! துரைமுருகனுக்கு "ஏறு முகம்"!
சென்னை: தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவராக 'வலம் வந்த' ஆற்காடு வீராசாமி இப்போது முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு 'தலைமை செயற்குழு உறுப்பினர்' என்ற பொறுப்பில் டபுள் டம்மியாக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. பொருளாளராக இருந்து கருணாநிதியின் வலது கரமாகவும் இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்புடன் தலைமைப் பதவிகளில் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற நிலை உருவான போது ஆற்காடு வீராசாமி தமது பொருளாளர் பதவியை விட்டுக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் என்ற புதிய பொறுப்பில் ஆற்காடு வீராசாமி அமர வைக்கப்பட்டார். ஆனால் கடந்த சில ஆண்டுகாலமாக உடல்நலக் குறைவால் கட்சி நடவடிக்கைகளில் ஆற்காடு வீராசாமி தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வந்தார்.
அண்மையில் தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்ற போது 'தலைமை செயற்குழு உறுப்பினர்' என்ற முக்கியத்துவம் அல்லாத பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவது உறுதியானது.இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் ஆற்காடு வீராசாமி வகித்து வந்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவிக்கு துணைப் பொதுச்செயலாராக இருக்கும் துரைமுருகனை நியமிப்பதாக கருணாநிதி அறிவித்தார்.
இதன் மூலம் தி.மு.க.வில் ஆற்காடு வீராசாமியின் 'செல்வாக்கு' அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.