திமுகவில் மீண்டும் சுறுசுறுப்பாக வலம் வர ஆரம்பிக்கும் ஆற்காடு வீரசாமி!
சென்னை: திமுக முன்னணி தலைவர்களில் ஒருவராக கருத்தப்பட்ட ஆற்காடு வீராசாமிக்கு திமுக தலைமை மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாம். அவரும் மீண்டும் அறிவாலயம் பக்கம் சுறுசுறுப்பாக வர ஆரம்பித்துள்ளாராம்.
ஆற்காட்டார் என்று கட்சியினரால் அன்புடன் அழைக்கப்படும் ஆற்காடு நா. வீராசாமி, திமுகவில் அதன் தலைவர் கருணாநிதியின் அன்புக்கு பாத்தியப்பட்டவர். கருணாநிதியின் மனம் அறிந்தவர் என்பதால், திமுக இரண்டாம் கட்ட தலைவர்களிடம் அற்காட்டார் மீது மிகுந்த மரியாதை உண்டு.
திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம், மிக முக்கிய இலக்காவில் ஆற்காடு வீராசாமி அமர்த்தப்படுவார். முன்பு தி. மு. க. வின் பொருளாளராகவும், தற்போது திமுகவின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார்.
மின்சாரம் கொடுத்த ஷாக்
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, தமிழத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக, திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்காடு வீராசாமி மீது கருணாநிக்கும் மிகவும் வெறுப்பானது. இதை பயன்படுத்தி சிலர் ஆற்காடு வீரசாமியின் அரசியல் வாழ்வுக்கு கரண்ட் வைத்துவிட்டனர்.
உடல் நல பாதிப்பு
அடி மேல் அடியாக, ஆற்காடு வீராசாமி தனது அண்ணா நகர் வீட்டில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, கால் தவறி விழுந்தார். அதில், அவரது இடது பக்க இடுப்பிற்கு கீழே காயமும், கையில் பலத்த அடியும் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது, அவர் நலமாக இருக்கிறார். ஆனால், திமுகவில் அவர் நலமாக இல்லாமல் இருந்து வந்தார்.
மாறன் பிரதர்ஸ் விவகாரம்
கருணாநிதிக்கும், தயாநிதிமாறன், கலாநிதி மாறன் தரப்புக்கும் இடையே மனக் கசப்பு வந்த போது, இதில் ஆற்காட்டார் பெயர் அடிபட்டு, அப்போது அரசியலில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.
ஓரம் கட்டி ஒதுக்கி வைத்து
இதன் காரணமாக, கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் உடல் நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி இவரை போட்டியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மனம் வெறுத்துப் போன ஆற்காடு வீராசாமி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
அறிவாலயம் பக்கம் தலை காட்டாமல்
அவரை திமுக தலைவர் கருணாநிதி கடும்பத்தில் உள்ள சிலருக்கு பிடிக்காமல் போனதால், அவரை திமுகவில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓரம் கட்டினர். இதனால் சில வருடமாக அண்ணா அறிவாலயம் பக்கமும், திமுக தலைவர் கருணாநிதி பக்கமும் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.
உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்
இந்த நிலையில், ஜூன் 2 ம் தேதி திமுக உயர் நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சற்குண பாண்டியன், திருச்செந்தூர் ஜெயசீலன், ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்க்காட்டார் சேவை..
இதன் மூலம் மீண்டும் ஆற்காடு வீராசாமி முன்னிலைக்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள். லோக்சபா தேர்தலில் கட்சி பெரும் தொய்வைச் சந்தித்துள்ள நிலையில் அனுபவம் வாய்ந்த பீல்ட் ஒர்க்கர்களான மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சியின் சேவைக்குத் தேவை என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஒதுங்கி இருந்த ஆர்க்காட்டார் மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதாம்.
மறந்தும் கூட...
ஆனால், மறந்தும் கூட திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆகியோருக்கு இடையே அரசியல் சதுரங்க போட்டியில் ஆற்காட்டார் தலையிடவே மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.