அறம் வளர்த்த அண்ணல்.. 'அருட்செல்வர்' பொள்ளாச்சி என்.மகாலிங்கம்!
இவரது தந்தை நாச்சிமுத்து கவுண்டர், கொங்கு மண்டலத்தின் செழுமைக்கும், தொழில் வளர்ச்சிக்கும் முக்கியக் காரணகர்த்தாக்களில் ஒருவராக விளங்கியவர்.
தனது தந்தையைப் போலவே சிறப்பு மிக்கவராக விளங்கியவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்.
சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக விளங்கினார். கல்வியாளராக, ஆன்மீகவாதியாக, காந்தியவாதியாகவும் திகழ்ந்த பெருமைக்குரியவர்.
1923ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பொள்ளாச்சியில் பிறந்தவர் மகாலிங்கம். சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கில் டிப்ளமோ பெற்றவர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
தந்தை நகராட்சித் தலைவராக விளங்கியவர் என்பதால் அவரது வழியில் இளம் வயதில் அரசியலிலும் நுழைந்தவர் மகாலிங்கம். 15 வருட காலம் காங்கிரஸ் சார்பில் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார். 1952ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1955 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளிலும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் வருவதற்கு இவரும் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முக்கியத் தொழில் குழுமமான சக்தி குழுமத்தை நிறுவியர். சக்தி சுகர்ஸ், டிஸ்டில்லரிஸ், ஆட்டோமொபைல், பைனான்ஸ் ஆகியவற்றில் இந்த குழுமம் ஈடுபட்டுள்ளது
2007ம் ஆண்டு பத்மபூஷன் விருதைப் பெற்றுள்ளார். அது போக இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருந்து, அறம் வளர்க்கும் அண்ணல் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் மகாலிங்கம்.