சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு... சென்னையில ஓடப்போகுது மெட்ரோ ரயிலு...
சென்னை: மெட்ரோ ரயில் எப்போ ஓடுமோ என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள். கோயம்பேடு-ஆலந்தூர் இடையே இன்னும் 2 வாரத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பதே அந்த இனிப்பான செய்தி.
பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறைகள்... வசதியான வடிமைப்பு என மெட்ரோ ரயிலை காணும் போதே அதன் அழகு கண்களை கவர்கிறது. முதல் சில வாரங்களுக்கு பயணக்கட்டணம் எதுவும் வசூலிக்காமல் பயணிகளை இலவசமாக அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் 2 வழித் தடங்களில் 45 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்த்தபட்ட பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.
மத்திய அரசும் இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க அனுமதி அளித்துவிட்டது. ஜூலை முதல்வாரம் அல்லது 2வது வாரத்தில் கோயம்பேட்டிலிருந்து வடபழனி, அசோக் நகர் வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
20 டிரைவர்கள் தயார்
மெட்ரோ ரயில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. சராசரியாக 34 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட இருக்கிறது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் கட்டமாக 9 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்காக 20 டிரைவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மணிக்கு 30000 பேர்
கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10.1 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் ரயில் சென்றடைகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 30 வினாடி ரெயில்கள் நின்று செல்லும். ஒவ்வொரு ரயிலிலும் 176 இருக்கைகளும், 1,100 பேர் நின்று செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சராசரியாக ஒரு மார்க்கத்தில் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும்.
காலை 5 மணிமுதல் இரவு 12 மணிவரை
தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 19 மணி நேரம் மெட்ரோ ரயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிடப்பட்டு உள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
5 நிமிடத்திற்கு ஒரு ரயில்
அலுவலக நேரங்களில் 4.5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 முதல் 15 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் பயன்பாட்டை பொருத்து 2.5 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்கவும், தினசரி சராசரியாக 6 லட்சம் பயணிகளை கையாளவும் வசதி உள்ளது.
நவீன முறையில் வடிவமைப்பு
சென்னையில் மெட்ரோ ரயில்கள் பயணிக்க நவீன தண்டவாளம்; ஓட்டுனர் எல்லை மீறினால் ரயிலை நிறுத்த, எமர்ஜென்சி பிரேக்; அனைத்து ரயில்களை நிறுத்தும் ஒரே, 'சுவிட்ச்;' ரயிலுக்குள் பயணிகளுக்கு கூடுதல் வசதி என, மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு வியக்க வைக்கிறது.
பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறை
சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் ஓ.சி.சி. என்று அழைக்கப்படும் (ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர்) மெட்ரோ ரயில் இயக்க கட்டுப்பாட்டு மையம் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.198.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வந்தது. இந்தப்பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது.
நேரடியாக கண்காணிக்கலாம்
சென்னை கோயம்பேடு - ஆலந்துார் வரை, ரயில் நிலையங்கள் உட்பட, வழித்தடத்தில் நடக்கும் அனைத்து செயல்களையும் நேரடியாக பார்க்க, கட்டுப்பாட்டு அறையில் பிரம்மாண்ட திரை உள்ளது. இவற்றின் மூலம் எலக்ட்ரிக்கல், தண்டவாளம் மற்றும் இயக்கம், பயணிகள் தவறுகள் அறிதல், சிக்னல் மற்றும் டெலிகாம் என, நான்கு பிரிவுகளில் ரயில்களை இயக்கும் பணி நடக்கும். ரயில் செல்லும் இடம், தண்டவாளத்தின் தன்மை, சிக்னல் செயல் இழப்பை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
ஓட்டுனருடன் தொடர்பு
ரயில் ஓட்டுனரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள வசதி உள்ளது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைக்கும் தகவல்களை அறிந்தவாறே, ரயிலை ஓட்டுனர் இயக்குவது; முழுமையாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தே ரயிலை இயக்குவது என்ற, இரு வழிகளில் ரயில் இயக்கும் இருக்கும்.
தானாக நிற்கும் ரயில்
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை ஓட்டுனர் மீறி, சிக்னலை கடக்க முற்படும் போது, 'எமர்ஜென்சி பிரேக்' என்ற முறையில், ரயில் தானாகவே நின்று விடும். ஒவ்வொரு ரயிலும், 500 மீட்டர் இடைவெளியில் இயக்கப்படும். இதில் தவறு நடந்தால், 'எமர்ஜென்சி பிரேக்' மூலம் ரயில் நிறுத்தப்பட்டு விடும்.
தற்கொலை செய்யமுடியாது
வாழ்க்கையில் வெறுப்படைந்தவர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வது போல் மெட்ரோ ரயிலில் அதுபோன்ற எந்த அசம்பாவிதங்களும் நடக்காது. காரணம் பறக்கும் பாதையிலும், சுரங்கப்பாதையிலும் ரயில் பயணிப்பதால், எவரும் தண்டவாளம் இருக்கும் பகுதிக்கு செல்ல முடியாதாம்.
ஒரு ஸ்விட்ச் போதும்
விபத்து நேரிடும் போது வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்களையும் நிறுத்த, 'எமர்ஜென்சி டிரிப் சிஸ்டம்' என்ற தொழில்நுட்ப வசதி உள்ளது. கட்டுப்பாட்டு அறையில் உள்ள அவசர கால பட்டனை அழுத்தினால், அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடும்.
அசோக்நகரில் கட்டுப்பாட்டு அறை
கோயம்பேடு கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு முடங்கினால், அசோக் நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்களை இயக்க முடியும். அந்த வகையில், நான்கு பிரிவுகளில் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
சுரங்க வழித்தடத்தில்
சுரங்க வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கியதும், ஐந்தாவதாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்படும்.ஆக்சலரி கன்ட்ரோலர் பிரிவில் இருந்து, சுரங்க வழித்தடத்தில், விபத்து நேரங்களில் தேவையான நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணிமனையின் பிரம்மாண்டம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பணிமனை வளாகத்தில் நிர்வாக கட்டிடம், ரயில்கள் நிறுத்தும் இடம், பழுதுபார்க்கும் இடம், ரயில்கள் சுத்தம் செய்யும் இடம், உள்கட்டமைப்பு அறை, ரயிலுக்கு தேவையான புதிய கருவிகள் மற்றும் பொருட்கள் வைக்கும் அறை, 110 கிலோவாட் சக்தி கொண்ட துணை-மின்சார நிலையம் ஆகியவை உள்ளன.அத்துடன் பணியாளர்களுக்கான ஓய்வு அறை மற்றும் உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு 4 பெட்டிகள் கொண்ட 25 ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
26 தண்டவாளங்கள்
ரயில்களை நிறுத்தி எடுத்து செல்ல வசதியாக, 12 'ஸ்டேப்ளிங்' வழித்தடம். ஆய்வு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காக, 10 பராமரிப்பு வழித்தடம். புதிய ரயில்களை நிறுத்தி வைக்கவும், ரயில்களை இழுத்து வர பயன்படும் இன்ஜினை நிறுத்தவும் வசதியாக, மூன்று அடிப்படை வசதிக்கான வழித்தடம். ரயிலை நிறுத்தி சுத்தம் செய்ய, 'வாஷிங்' வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக
நாட்டிலேயே முதல் முறையாக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் தான் ஜல்லிகற்கள் போடாமல் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. எடை குறைவான ரெயிலை தாங்கும் வகையில் ஜல்லிக்கற்களுக்கு பதிலாக ரப்பர் புஸ்கள், கான்கிரீட் பலகைகள் மற்றும் ஆங்காங்கே நவீன கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் (உயர்த்தப்பட்ட கட்டுமானம்) அர்ஜுனன் கூறியுள்ளார்.
ஒரு நிமிடத்தில் பளிச் பளிச்
மெட்ரோ ரயில் பணிமனையில் 36 ரயில்கள் நிறுத்துவதற்கான வசதி உள்ளது. பகல் நேரங்களில் ரயில்கள் இயக்கப்படுவதால் இரவு நேரங்களில் இந்த பணிமனையில் ரயில்கள் பராமரிக்கப்படும். ரயில்களை சுத்தம் செய்வதற்கான வழித்தடத்தில், ரயில் வந்து நின்றவுடன், முதலில், பெட்டியின் பக்கவாட்டு மற்றும் மேல் பகுதியில், தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. பின், ரயில் மெதுவாக பயணிக்க, தானியங்கி சுத்தம் செய்யும் வசதியில், சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. ஒரு நிமிடத்திற்குள் ரயில் சுத்தமாக்கப்பட்டு விடுகிறது.
கட்டணம் எவ்வளவு ரூ.10
முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.12, 4 முதல் 6 கிலோ மீட்டருக்கு ரூ.13, 6 முதல் 9 கிலோ மீட்டருக்கு ரூ.16, 9 முதல் 12 கிலோ மீட்டருக்கு ரூ.17, 12 முதல் 15 கிலோ மீட்டருக்கு ரூ.19, 15 முதல் 18 கிலோ மீட்டருக்கு ரூ.20, 18 முதல் 21 கிலோ மீட்டருக்கு ரூ.21, 21 முதல் 24 கிலோ மீட்டருக்கு ரூ.22, 24 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.24, 27 கிலோ மீட்டருக்கு ரூ.29 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இலவசமாக பயணிக்கலாம்
முதல் சில வாரங்களுக்கு பயணக்கட்டணம் எதுவும் வசூலிக்காமல் பயணிகளை இலவசமாக அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
என்னென்ன வசதிகள்
மெட்ரோ ரயிலுக்குள், தனி மகளிர் பெட்டி உண்டு. இதற்கு, நான்கு கதவுகள் உண்டு. இதில், ஒரு பகுதி, சிறப்பு பகுதியாக அமைக்கப்பட்டு, கூடுதல் கட்டணம் அடிப்படையில் பயணிக்க முடியும். பெட்டிக்குள் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க, பக்கவாட்டு கைப்பிடி, மேல் கைப்பிடி என, இரண்டு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.உடைமைகளை வைக்க வசதி உள்ளது. ஒரு ரயில் பெட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, இரண்டு இருக்கைகள் உள்ளன. அவசர நேரத்தில் ஓட்டுனரை அழைக்க, நவீன வசதி உள்ளது.
ஜூலையில் மெட்ரோ ரயில்
100 சதவீதம் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும். ஜூலை மாதம் முதல் வாரத்தில் (2 வாரத்தில்) இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை பொதுமேலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார். எது எப்படியோ இனியாவது தாமதமின்றி மெட்ரோ ரயில் சென்னை நகரில் வலம் வரவேண்டும் ஓடவேண்டும் என்பது சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பாகும்.