கூண்டோடு கலைக்கப் பட்டது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி: வாசன் கட்சியில் இணைய தீர்மானம்!
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டு, ஜி.கே.வாசன் தொடங்க உள்ள புதிய கட்சியில் இணைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். புதிய கட்சிக்கான பெயர், சின்னம் மற்றும் கொடி குறித்து தொண்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் இது தொடர்பான விவரங்களை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்து, வாசன் தொடங்க உள்ள கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமார் கூறுகையில், ‘அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு, வாசன் தொடங்க இருக்கும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
மாவட்ட, ஒன்றிய, வட்டார மற்றும் அனைத்து அணிகளின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மொத்தம் 1,000க்கும் மேற்பட்டோர் எங்களிடம் பெயர் கொடுத்துள்ளனர். இன்னும் பலர், ஆதரவு தெரிவித்து எங்கள் இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, 12 ஒன்றிய நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள், மகளிரணி உள்ளிட்டவர்கள் அவர்கள் வகித்து வரும் அனைத்து நிர்வாக பொறுப்புகளிலிருந்தும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டோம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்க உள்ள கட்சிக்கு எங்களது ஆதரவை அளிப்பதோடு, திருச்சியில் வாசன் தலைமையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.