தமிழகத்தில் மற்றொரு ஷாக் சம்பவம்.. பைனான்ஸ் நிறுவனம் டிராக்டரை ஜப்தி செய்ததால் விவசாயி தற்கொலை
திருச்சி: டிராக்டரை ஜப்தி செய்ததால் அவமானம் தாங்க முடியாத விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரை அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர். விவசாயி. இவர், சோழமண்டலம் பைனான்ஸில் டிராக்டர் வாங்க ரூ.7 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்த கடனில் ரூ.5 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்திவிட்ட நிலையில், மீதமுள்ள ரூ.2 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில், எஞ்சிய பணத்தை திருப்பி தர வலியுறுத்தி, அந்த பைனான்ஸ் ஊழியர்கள் நேற்று அழகரின் டிராக்டரை ஜப்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல், விவசாயி, அழகர், தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
2 நாளுக்கு முன் தஞ்சாவூரில் விவசாயி பாலன் என்பவர், வாங்கிய கடனை செலுத்த தவறியதால் போலீசார் அவரை அடித்து இழுத்து சென்றனர். அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பிசென்றதாக கூறப்படும் நிலையில், விவசாயிகளை மட்டும் குற்றவாளிகள் போல காவல்துறை நடத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியது சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது.
இந்நிலையில், கடன் தொல்லையால், விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.