அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- பாதுகாப்பு அதிகரிப்பு
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அரியலூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் கடிதம் எழுதியுள்ளதால் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மிரட்டல் தொடரும் என கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அனிதாவிற்கு நீட் தேர்வு எமனாக அமைந்து விட்டது.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அரியலூர் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ரத்து செய்யும் வரை மிரட்டல் தொடரும் என்றும் மர்மநபர்கள் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் ரயில் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது.