நேத்து அய்யாகண்ணு.. இன்றைக்கு அர்ஜுன் சம்பத்.. ரஜினி ரொம்ப பிசி!
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார்.
ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அவரது அரசியல் பிரவேசம் குறித்து தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவர் காலா படப்பிடிப்பில் பிசியாகிவிட்டதாக கூறப்பட்டாலும் அரசியல் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அய்யாக்கண்ணு தலைமையில் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து நதிகள் இணைப்பு தொடர்பான சில கோரிக்கைகளை வைத்துவிட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று காலை சென்றார். அங்கு அவர் ரஜினியுடன் 45 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.