ரஜினி, கமல் அரசியலுக்கு வந்து ஆன்மீக ஆட்சியை தரவேண்டும் - அர்ஜூன் சம்பத்
ரஜினியும் கமலும் இணைந்து அரசியலுக்கு வந்து தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை தர வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்: ரஜினிகாந்துடன் கமலஹாசன் இணைந்து தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியைத் தர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாரணர் இயக்க தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஹெச்.ராஜா போட்டியிட்டது தவறு. ஆனால், அவர் தோல்வியடைந்ததால், இந்து இயக்கம் தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறுவது தவறு.
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் பேட்டன் பவுல் என்ற ஆங்கிலேயர், சாரணர் இயக்கத்தை தொடங்கினார். சாரணர் இயக்கமும் செஞ்சிலுவைச் சங்கமும் அயல்நாடுகளுக்கு உளவு சொல்லும் கிறிஸ்தவ அமைப்புகளாக செயல்பட்டன.
எனவே சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவை பள்ளிகளில் இருந்து அகற்றப்பட்டு தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டும். தமிழக பள்ளிகளில், விருப்பமுடைய மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்.
மக்கள் செல்வாக்கு கொண்ட ரஜினிகாந்துடன், கமலஹாசன் அரசியலில் இணைந்து செயல்பட்டு தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை தர வேண்டும்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் பேசினார்.