ஆகம விதிப்படியே அர்ச்சகர் நியமனம்.... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அர்ஜூன் சம்பத் வரவேற்பு
சென்னை: ஆகம விதிகளின் படி தான் இந்துக் கோயில்களில் ஒருவர் அர்ச்சகராக முடியும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் ஜாதி ரீதியாகத்தான் ஒருவர் அர்ச்சகராக வேண்டும் என்று கூறவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகராகவும், பூசாரிகளாகவும் உள்ளனர். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் ஆகம விதிகளின் படி தான் ஒருவர் அர்ச்சகராக முடியும் என்று தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அரசியல் லாபத்துக்காக இந்தத் தீர்ப்பை குறை கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் பல கோயில்கள் ஒரு கால பூஜைக்குக் கூட வழியில்லாமல் வெகு நாட்களாக பூட்டிக்கிடக்கின்றன. அந்த கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டு, அர்ச்சகர் படிப்பு முடித்தவர்களை பூஜை செய்ய நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.