சென்னை: காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது மனைவி புவனேஷ்வரி மற்றும் இரண்டு மகன்களுடன் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். ரவிச்சந்திரன் குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டதாகவும், அவர் மட்டும் விடுப்பில் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்ட நிலையில் ரவிச்சந்திரனின் சடலத்தை ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கூடுதல் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான ஹரீஷ் காவல் அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குதற்குள், ஆயுதப்பிரிவு ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.