பசும்பொன் தேவர் சிலைக்கு 24 மணி நேர பாதுகாப்பு: ஜெ. உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தங்கக்கவசம் அணிவிக்கப்பட்ட சிலை 10 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது. தேவர் நினைவிடத்துக்கு வரும் பார்வையாளர்கள், பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
24 மணிநேர பாதுகாப்பு
தங்கக் கவசத்துடன் உள்ள தேவர் சிலைக்கு தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தேவர் நினைவிடத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அடுத்த சில நாட்களுக்கு பாதுகாப்பு பணி தொடரும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனியாக பாதுகாப்பு பெட்டகம் செய்து, அதில் தங்க கவசத்தை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின்போது தங்கக் கவசம் கொண்டு வரப்பட்டு சிலைக்கு அணிவிக்கப்படும்.
மூன்று நாட்கள் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் மீண்டும் வங்கிக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு முறை தங்கக் கவசத்தை கொண்டு வந்து அணியும் போதும், விழா முடிந்து கொண்டு செல்லும்போதும் அதன் எடை சோதனை செய்யப்படும்,‘‘ என்றும் அவர் கூறினார்.
தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, இந்த பாதுகாப்புக்கு உத்தரவிட்டுள்ளார். இன்னும் 10 தினங்களில் பாதுகாப்புடன் கூடிய வங்கி பெட்டகத்துக்கு தங்கக் கவசம் எடுத்துச் செல்லப்படும் என நினைவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.