தேவரின் "தங்கக் கவசம்".. அச்சுப் பிசகாம சினிமா சீன் மாதிரியே இருக்கே!!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசம் இப்போது சசிகலா குடும்பத்து கவுரவ பிரச்சனையாகிவிட்டது.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாக்களில் நாம் கண்ட காட்சிகளில் ஒன்று அப்படியே பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவச விவகாரத்தில் நடந்தேறியுள்ளது.
கிராமத்தில் 2 பங்காளிகள் இருப்பார்கள்.. யாருக்கு முதல் மரியாதை என்பதுதான் படத்தின் மையக் கருத்தாக இருக்கும். இதுதான் தமிழ் சினிமா காலம் காலமாக கண்டு வரும் காட்சி.
அதே காட்சிதான் இப்போது..
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அதிமுக சார்பாக வழங்கினார்.
இந்த தங்க கவசத்தை வங்கியில் இருந்து யார் பெற்று தேவர் நினைவு இல்ல பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பது என்பதுதான் பிரச்சனை.
எங்க ஐடியாதான்
தேவர் சமூக வாக்குகளைப் பெறுவதற்காக ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்ததே சசிகலாதான்.. ஆகையால் சசிகலா வசம் இருக்கும் அதிமுக(அம்மா) கட்சிக்கே தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறும் உரிமை இருக்கிறது என்கிறது தினகரன் தரப்பு.
உரிமை கோரும் ஓபிஎஸ்
ஜெயலலிதா மறைந்த போது அதிமுக பொருளாளராக இருந்த தமக்கே தங்க கவசத்தை பெற்று தேவர் நினைவில்ல நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் உரிமை இருக்கிறது என்கிறது ஓபிஎஸ் தரப்பு.
களத்தில் கலெக்டர்
இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; இருவருமே உரிமை கோருவதால் வங்கி அதிகாரிகள் மண்டையை பிய்த்து கொண்டனர். கடைசியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கவுரவ பிரச்சனை
ஆனால் சசிகலா குடும்பம் இதை தங்களது சொந்த கவுரவ பிரச்சனையாகவே கருதுகிறது. மதுரை அண்ணா நகர் வங்கிக்கு எழுதிய கடிதத்தில் தினகரன் குறிப்பிட்டிருக்கும் அந்த தகவல் இதை உறுதிப்படுத்துகிறது.
சசி சொந்தங்களின் சபதம்
அதாவது தம்மால் நியமிக்கப்பட்டவர்களிடம்தான் தங்க கவசத்தை தர வேண்டும் என ஏற்கனவே சசிகலாவே வங்கிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் என சுட்டிக்காட்டியுள்ளார் தினகரன். இது குறித்து நாம் விசாரித்த போது, சசிகலா பரோலில் வந்த போது அவரது குடும்ப உறவுகள் விவாதித்த முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று. தங்களது குடும்பத்தின் கவுரவ பிரச்சனை இது. சொந்த சமுதாய மக்களிடம் ஓபிஎஸ் செல்வாக்கு பெறுவதைத் தடுக்க இதுதான் சரியான சந்தர்ப்பம்.. ஆகையால் எந்த எல்லைக்கும் போய் போராடியாவது தங்க கவசத்தை வாங்கி தேவர் நினைவில்ல நிர்வாகிகளிடம் ஒப்படைப்போம் என சசிகலா முன்னிலையில் சபதம் போட்டார்களாம் உறவுகள் என்கின்றனர். அதற்காகத்தான் ஓபிஎஸ் இன்று மதுரை வங்கிக்குப் போனபோது தினகரன் தரப்பும் வங்கி முன்பு ஆட்களை இறக்கி அதகளப்படுத்தியதாம்.